ஆன்மீகம் சார்ந்த விடயங்களில் அரசியல் செய்வதற்கு முற்படக்கூடாது: ராமேஷ்வரன் எம்.பி
ஆன்மீகம் சார்ந்த விடயங்களில் அரசியல் செய்வதற்கு முற்படக்கூடாது. அரசியல் என்பது மக்களுக்கான சேவை. அந்த சேவையை முறையாக வழங்க அரசியல்வாதிகள் ஒன்றுபட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பொகவந்தலாவ பிரதேசத்தில் இன்று (18.07.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
"மலையக அரசியல் கலாசாரம் மாற வேண்டும் என்ற உயரிய பண்புடனேயே எமது பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் செயற்பட்டு வருகின்றார்.
அரசியல் தரப்புகள் முன்வர வேண்டும்
அதற்காக பல விட்டுக்கொடுப்புகளை செய்கின்றார். இதனை எமது பலவீனமாக கருத வேண்டாம். மக்களுக்காகவே அதனையும் செய்கின்றோம்.
ஏனெனில் எமது மலையக இளைஞர்களும் இன்று மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். ஆன்மீக நிலையங்கள், பாடசாலைகள் போன்ற முக்கிய - சமூகத்தின் அங்கீகாரத்தை பெற்ற இடங்களில் ஒருபோதும் அரசியல் நடத்தக்கூடாது.
அவ்வாறான இடங்களில் இணைந்து செயற்பட்டு சிறந்த முன்னுதாரணத்தை சமூகத்துக்கும், அடுத்த தலைமுறைக்கும் வழங்குவதற்கு அரசியல் தரப்புகள் முன்வர வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.





