விடுதலைப்புலிகளுக்கு கிடைத்த வெளிப்படையான ஆதரவு: பகிரங்கப்படுத்திய முக்கியஸ்தர்
விடுதலைப்புலி இயக்கத்திற்கு தமிழ் நாட்டில் வெளிப்படையாக ஆதரவு வழங்கப்படுகின்றது.சில அமைப்புகளும் கட்சிகளும் அந்த பணியில் தீவிரமாக செயற்படுகின்றன அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முயற்சியொன்று ராஜீவ் கொலை வழக்கில் மேற்கொள்ளப்பட்டது என உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வெளிப்படையான ஆதரவு
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தமிழகத்தில் ஆதரவு வலுக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அதற்கு மேலாக விடுதலைப்புலி இயக்கத்திற்கு தமிழ் நாட்டில் வெளிப்படையாக ஆதரவு வழங்கப்படுகின்றது.சில அமைப்புகளும் கட்சிகளும் அந்த பணியில் தீவிரமாக செயற்படுகின்றன அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தான் ராஜூவ் படுகொலையில் குற்றம் சுமத்தப்பட்ட 26 பேரில் 13 பேர் ஈழத் தமிழர்கள் மற்ற 13 பேர் தமிழ்நாட்டு தமிழர் என அடையாளம் காணப்பட்டனர்.
இந்த முயற்சியில் அவர்கள் முதலில் வெற்றி பெற்றார்கள். ராஜுவ் கொலை வழக்கையொட்டி சி.பி.ஐ விசாரணை என்ற பெயரில் தமிழ்நாட்டை நரவேட்டை ஆடினார்கள். மக்கள் கடுமையாக அச்சுறுத்தபட்டார்கள். அச்சம் சூழ்ந்த சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது.
இதன் பின்னர் 19 பேரை குற்றமற்றவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விடுதலையானவர்களை கூட்டிக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் சென்று இவர்கள் கொலைக்காரர்களா என மக்கள் மத்தியில் வினவிய போது,அவர்கள் கொலையாளிகள் இல்லை என மறுமொழி சொன்னார்கள். அது தான் தமிழ்நாட்டில் நிலவிய அச்சத்தை தகர்த்தெறிந்தது.
எந்த அரசியல் கட்சியும் எமக்கு ஆதரவு வழங்கவில்லை
ஆரம்பத்தில் சிறு சிறு அமைப்புகள் தான் எமக்கு ஒத்துழைப்பு கொடுத்தன.நாங்கள் ஆரம்பித்த 26 தமிழ் அருள்காப்பு குழுவில் அங்கம் வைத்த குழு பட்டியல் என்னிடம் தற்போதும் உள்ளது.
எந்த அரசியல் கட்சியும் எமக்கு ஆதரவு வழங்கவில்லை. அதற்காக நான் கவலைப்படவும் இல்லை. அன்றைக்கு இருந்த சூழ்நிலை அப்படி. ராஜீவ் வழக்கில் 19 பேர் விடுதலையான பின்பு தான் பலர் எம்முடன் இணைந்து குரல் கொடுக்க தொடங்கினார்கள்.
இதனைத்தொடர்ந்து ஈழத் தமிழர் பிரச்சினை மீண்டும் பேசு பொருளானது. அதை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் சி.பி.ஐ இப்படி ஒரு வழக்கை விசாரணை செய்தது.
உண்மையான குற்றவாளிகள் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான்.
ராஜுவ்காந்தி கொலைவழக்கில் இந்த 26 பேரும் தொடர்புபட்டார்களா? இல்லையா? என்ற உண்மை எனக்கு தெரியும். அதனால் தான் நான் அவர்களுக்கு உதவினேன்.அவர்களை ஆதரித்தேன்.
இதன்போது பலர், இந்திராகாந்தி உங்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் நீங்கள் அவரின் மகனை கொன்றவர்களுக்கு உதவி செய்கின்றீர்களே என கேட்டார்கள். அவர்கள் விபரம் தெரியாமல் பேசுகிறார்கள் என்று கடந்து விட்டேன். நான் கோவப்படவில்லை.
ஆனால் உண்மை என்னவென்று தெரிந்துக்கொண்டு பேச வேண்டும். உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் முதலில் 19 பேரையும் பின்னர் 7 பேரையும் விடுதலை செய்கின்றதென்றால், நீதிமன்றத்திற்கு உண்மை தெரியாமலா இருக்கும் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.”என கூறியுள்ளார்.