இலங்கை தமிழர் தரப்புக்கு அன்று ராஜிவ் காந்தி வழங்கிய உறுதி மொழி!
13 தான் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்று நாங்கள் என்றைக்கும் ஏற்றுக் கொண்டதில்லை. 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்னர் அது சம்பந்தமான ஒரு பேச்சுவார்த்தை இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டிருந்த நாங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இந்த தீர்வு எங்களுக்கு போதாது என்றும் இதனை ஏற்க முடியாது என்பதையும் மிகத் தெளிவாக அன்றைய இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியிடம் தெரிவித்திருந்தோம் என நாடாளுமன்ற உறுப்பினர் தரமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாங்கள் அப்போது முன்வைத்த கருத்தை ராஜிவ் காந்தியும் ஏற்றுக் கொண்டிருந்தார். இருந்தாலும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை பகிரங்கமாக எதிர்க்காமல், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் எதிர்க்காமல் இருங்கள் என்றும் தன்னால் முடிந்தளவுக்கு இந்த ஒப்பந்தத்தை எதிர்வரும் காலங்களில் மெருகேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் எங்களிடத்தில் ராஜிவ் காந்தி அன்று உறுதியளித்திருந்தார்.
அது மாத்திரமின்றி வடக்கு - கிழக்கில் தேவையான நிதியை முதலீடு செய்து அபிவிருத்தியடைவதற்கு முழுமையான உதவிகளை செய்வதாகவும் அன்று ராஜிவ் காந்தி எங்களிடத்தில் கூறியிருந்தார்.
இன்று இருக்கக்கூடிய சூழலில் 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்வதற்கான என்னப்பாடு இன்றைய அரசாங்கத்தின் மேல் மட்டத்தில் இருக்கின்ற பலருக்கு இருக்கின்றது. எனவே அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிந்து கொண்டதன் பின்னர்தான் அரசியலமைப்பில் இருக்கக்கூடிய 13 ஐ காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றதொரு எண்ணப்பாட்டில் இந்த விடயத்தை முன்னெடுத்திருந்தோம்.
அதற்காக 13தான் தமிழர்களுக்கான இறுதி தீர்வு என்று நாங்கள் இந்த நிமிடம் வரை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்திய பிரதமருக்கு அனுப்பியுள்ள ஆவணத்திலும் தமிழர்களுடைய இலக்கு சுயநிர்ணய அடிப்படையில் ஒரு சமஷ்டி தீர்வு என்பதை தெளிவாக எழுதியிருந்தோம். ஆனால் இன்று இருக்கின்ற நிலையில் 13ஐ காப்பாற்ற வேண்டுமென்ற தேவை எங்களுக்கு இருக்கின்றது.
இந்திய பிரதமருக்கு அனுப்பிய ஆவணத்தை எதிர்க்கக்கூடிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பினர் கூட மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள். அவர்களுடைய அரசியல் கொள்கை என்ன என்பது எங்களுக்கு விளங்கவில்லை. எதுவாக இருந்தாலும் 13ஐ காப்பாற்ற வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.