முருகன் உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட நான்கு பேரை இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இருந்த நளினி, முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
இதற்கமைய, இலங்கையரான முருகன் தற்போது திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், முருகனை, அங்கிருந்து விடுவித்து தன்னுடன் வாழ அனுமதிக்கும்படி அவரது மனைவி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு விசாரணை ஆரம்பம்
இந்த வழக்கு விசாரணை கடந்த முறை நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது லண்டனில் வசிக்கும் மகளுடன் சேர்ந்து வாழ கணவர் முருகன் விரும்புவதாகவும், கடவுச்சீட்டு பெறுவது தொடர்பாக அவர் இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டியுள்ளதாகவும் நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இவர்களுடைய கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் இவர்கள் நான்கு பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.




