அநுர தரப்பும் வீட்டுக்குச் செல்ல நேரிடும் - ராஜித சேனாரத்ன பகிரங்க எச்சரிக்கை
அநுர அரசு தொடர்ந்தும் அடக்குமுறைகளைப் பிரயோகித்துக் கொண்டிருக்குமாயின் நாட்டில் மீண்டும் மக்கள் கிளர்ந்தெழுவார்கள், ராஜபக்ஷ அரசு போல் இந்த அரசும் வீட்டுக்குச் செல்ல வேண்டி வரும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களிடம் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மக்கள் ஆணை
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரச தரப்பினர் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே மக்களின் ஆணையைக் கோரி இருந்தது. அதன் பிரகாரம் அவர்களின் வாக்குறுதிக்கமையவே மக்கள் அவர்களுக்கு ஆணை வழங்கி இருக்கின்றார்கள். ஆனால் அரசு, மக்களுக்கு வழங்கிய முக்கியமான வாக்குறுதிகளை மறந்து செயற்பட்டு வருகின்றது.
இதனால் அரசு தொடர்பில் மக்களுக்கு இருந்து வந்த நல்லெண்ணம் குறைவடைய ஆரம்பித்துள்ளது. அதனால் அரசு அந்த நிலைமையை மாற்றியமபை்பதற்காக முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை விசாரணைக்காகக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்க ஆரம்பித்திருக்கின்றது.
ஊழல், மோசடியுடன் யாராவது சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களை விசாரணைக்கு அழைப்பதற்கு நாங்கள் எதிர்பில்லை. ஆனால் மக்கள் இதற்கு மாத்திரம் அரசுக்கு ஆணை வழங்கவில்லை. மக்கள் ஆணை வழங்கிய அனைத்து விடயங்களும் இன்று மறுபக்கத்துக்குத் திரும்பியுள்ளன.
சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம்
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாக இந்த அரச தரப்பினர் தெரிவித்தார்கள். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மாற்றுவதாகத் தெரிவித்தார்கள். இவை எதுவும் இடம்பெறவில்லை. அதேபோன்று அரசின் சுயாதீனத்தன்மை, வெளிப்படைத்தன்மை, நியமனங்கள் எதுவும் அவர்கள் தெரிவித்தது போல் செயற்படவில்லை.
அதனால் அரசின் இயலாமையை மறைத்துக்கொள்வதற்கே தற்போது, ஒருசிலரை குற்றப் புலனாய்வுக்கு அழைத்து வருகின்றார்கள். இந்த அரசிம் தற்போது அடக்குமுறை மாத்திரமே எஞ்சி இருக்கின்றது. அரசு ஒன்று அடக்குமுறையை மேற்கொள்ளத் தீர்மானிப்பது என்பது அது அந்த அரசின் பலவீனமாகும்.
இந்த அரசும் தற்போது அதனையே கையில் எடுத்திருக்கின்றது. அதேநேரம் இன்று நாடுபூராகவும் அரச வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. வைத்தியர்களின் கோரிக்கைகளில் நியாயம் இருக்கின்றது. அதனால் அரசு அவர்களுடன் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றார்.