முதலமைச்சரை நான் சந்திக்க மாட்டேன்..! விஜய் தொடர்பான தனது மன நிலையை வெளியிட்ட ரஜினிகாந்த்
தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.
ஏனினில் அவர்கள் செய்யும் எந்தவொரு தவறும் முதலமைச்சர் விஜய்க்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்திருந்தார். தேர்தலுக்கு பிறகு திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க அவர் பேசியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பிலும் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எம்ஜிஆர், என்டிஆர் செய்யாத சாதனைகளை முதலமைச்சர் விஜய் செய்துள்ளார். மத்தியில் பாஜக, தமிழகத்தில் திமுக, அதிமுகவை எதிர்த்து தனி ஆளாக வெற்றி பெற்றுள்ளார் முதலமைச்சர் விஜய்.
தவெக தொண்டர்கள் அவதானமாக செயல்பட வேண்டும். தவெக தொண்டர்கள் செய்யும் சிறு தவறு கூட விஜயை பாதிக்கும். விஜய் முதல்வராகக்கூடாது என நான் முயற்சித்ததுபோல் விமர்சனம் வெளியானது. விஜய் மீது எனக்கு பொறாமை என பரப்புகின்றனர்.
விஜய் முதலமைச்சரானதில் மகிழ்ச்சி
விஜய் வெற்றி பெற்ற பின் எக்ஸ் தளத்தில் வாழ்த்தினேன். சினிமாவில் இருந்து விஜய் முதலமைச்சரானது எனக்கு பொறாமை இல்லை. ஆச்சரியம் கலந்த சந்தோஷம். நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100% வென்றிருப்பேன்.
மாற்றம் வேண்டும் என மக்கள் நினைத்த சமயத்தில் விஜய் வந்துள்ளார். விஜய் முதலமைச்சராக கூடாது என்று திமுக - அதிமுக கட்சிகளை ஒன்று சேர்க்க முயற்சிக்க சொல்லும் அளவுக்கு நான் தரங்கெட்டவன் கிடையாது.

தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இணையத்தில் விமர்சனங்கள் பரவி வருகிறது. பதில் சொல்லாவிட்டால் உண்மையாகி விடும். தேர்தல் முடிவுகள் வந்தவுடன் ஸ்டாலினை சென்று பார்த்தேன். அது அரசியலை தாண்டி நட்பு. நண்பர் என்ற முறையில் அவரை சந்தித்தேன்.
தேர்தலில் விஜய் வென்றது மகிழ்ச்சியே. நான் அரசியலில் இல்லாத போது முதலமைச்சர் விஜய் மீது ஏன் பொறாமைப்பட வேண்டும். அத்தோடு, திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் அவரை சென்று சந்தித்துள்ளனர். ஆனால் மரியாதை நிமித்தம் அவரை நான் சென்று சந்திப்பதில் எனக்கு விருப்பம் இல்லை.
கமல்ஹாசன் முதலமைச்சராக ஆகி இருந்தால் பொறாமை வந்து இருக்குமோ என்னமோ? கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காமல் இருப்பது கிடைக்காது. விஜய் தனி ஆளாகாக வெற்றி பெற்றிருக்கிறார். அது ஆச்சரியம் கலந்த ஒரு சந்தோஷம். விஜய் மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் கூறினார்.