முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே!
முள்ளிவாய்க்கால் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல மனித நேயத்தை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனும் தெரிந்து வைத்திருக்கும் ஒரு பெயராகும்.
21 ஆம் நூற்றாண்டில் மனித குலமே வெட்கி தலைகுனியும் அளவுக்கு மோசமான படுகொலை நடந்த மண். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தது.
மீள்குடியேறி வாழும் மக்களின் துயரம்
உரிமைக்காக போராடிய தமிழினத்திற்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக் கூறி சர்வதேச நாடுகள் பலவற்றின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட போர் முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெற்ற மனித பேரவலத்துடன் முடிவுக்கு வந்தது.
வன்னியின் பல பகுதிகளிலும் இருந்த மக்கள் இடம்பெயர்ந்து, இறுதியாக பதுங்கு குழிகளும், தற்காலிக தரப்பால் கூடாரங்களும் அமைத்து பாதுகாப்புக்காக தஞ்சம் கோரிய இடமே முள்ளிவாய்க்கால் ஆகும்.

இராணுவத்தின் நவீன படைகலங்களினதும், எறிகணைகளினதும், விமானப்படையினதும் தாக்குதலுக்கு இலக்காகி குருதியால் அந்த மண் தோய்ந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் அந்த இடத்தில் கொல்லப்பட்டனர். பலர் தமது அபயங்களை இழந்து இன்றும் போரின் அடையாளங்களாக எம் கண்முன்னே வந்து செல்கின்றனர்.
இன்னும் சிலர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டும், இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டும் காணாமல் போயினர். அவர்களைத் தேடி அவர்களது தாய்மாரும், மனைவிமாரும், உறவுகளும் இன்றும் வீதிகளில் வருடக்கணக்கில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நந்திக்கடல் ஓரமாக முள்ளிவாய்காலில் இருந்து மக்களை வெளியேற்றிய வட்டுவாகல் பாலமும் அதனை அண்டி அமைந்துள்ள நந்திக்கடலும் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்காலில் மீள்குடியேறி வாழும் மக்களின் மனங்களில் ஏதோவொரு சோகத்தையும், துயரத்தையும் அவதானிக்க முடிகிறது.
மக்களின் அவலங்ளும் போரின் தாக்கமும்
போரின் கொடூரத்தின் சாட்சியாக முள்ளிவாய்க்கால் எங்கும் 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அந்த மக்களின் ஆடைகளும், குழந்தைகள் விளையாடிய பாவைகளும், காயப்பட்ட மக்களுக்கு மருந்து ஏற்றப்பட்ட மருந்து குவளைகளும், காலவோட்ட படங்களை பதிவு செய்திருந்த அல்பங்களும் பரவலாக காணப்படுகின்றன.
சாப்பிட உணவு இல்லாத நிலையிலும் அந்த மக்கள் சாப்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வைத்திருந்த சாப்பாட்டுப் பாத்திரங்கள், குவளைகள் என்பனவும் அந்த மக்களின் அவலங்களையும் போரின் தாக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இன்றும் ஆங்காங்கே காணப்படுகின்றன.

சாப்பாட்டுப் பாத்திரங்கள் உணவுக்கு பதிலாக வெடிகுண்டுகளையே மக்களுக்கு வழங்கியிருக்கின்றது என்ற கதையினை அந்த பாத்திரங்களில் இருக்கும் ஒவ்வொரு துவாரங்களும் வெளிப்படுத்துகின்றன.
விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் துப்பாக்கி ரவைகள் வெடித்த நிலையிலும், வெடிக்காத நிலையிலும் ஆங்காங்கே காணப்படுகின்றன.
பாதுகாப்பாக மக்கள் அமைத்துக் கொண்ட பதுங்கு குழிகள் போரின் சாட்சியமாக இன்றும் அந்த மண்ணின் அடையாளமாகவே உள்ளது. இத்தகைய போரின் சாட்சியங்களோடு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் மக்கள் குடியிருக்கின்றனர்.
2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம்
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் 2005 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் மீள்குடியேறி வாழ்வைக் கட்டியெழுப்பிய போது நான்கு வருடங்களுக்குள் மீண்டும் அவர்களது வாழ்வை இந்தப் போர் சின்னாபின்னமாக்கியது. இன்று எழுந்திருக்க முடியாத நடைபிணங்களாக அந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
வட்டுவாகல் பாலத்தை கடந்து சென்றவர்களில் இராணுவத்தினரினதும், அரசாங்கத்தினதும் அறிவித்தலுக்கு அமைய விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையோர் மற்றும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என பலர் இராணுவத்தினரிடம் அவர்களின் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டனர். அவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களில் பலர் இன்றும் காணாமலாக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

அந்தவகையில், காணாமல் ஆக்கப்பட்ட சிலரின் கடைசிப் பயணம் வட்டுவாகல் பாலமாகவே உள்ளது. ஆகவே, வட்டுவாகல் பாலம் என்பது போரின் சாட்சியாகவும், அடையாளமாகவும் விளங்குகின்றது. சிலர் தமது உறவுகளை தொலைத்த கடைசி இடமாகவும் அப் பாலமே உள்ளது.
போரின் போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ரவைகளினதும், செல் தாக்குதலின் துகள்களாலும் துளைக்கப்பட்ட வீடுகள், கட்டடங்கள் என்பன அந்த மண்ணில் இன்றும் காணப்படுகின்றது. சில பதுங்கு குழிகளை தோண்டும் போது மரணித்த மக்களின் எலும்புக் கூடுகளும் காணப்படுகின்றன.
செப்பனிப்படாத வீதிகள், குடிநீர்ப்பிரச்சனை, வாழ்வாதராத்திற்கான கடல் வளத்தை தென்னிலங்கை மீனவர்கள் சுரண்டல், அந்த மக்கள் குடியிருக்கும் தாழ் நிலப்பகுதியில் அடிக்கடி வெள்ளம் என அந்த மக்கள் போர் முடிந்து 17 வருடங்களின் பின்னும் நிம்மதியாக வாழ முடியாத நிலையே உள்ளது.
முள்ளிவாய்க்கால் போர் வெற்றி
முள்ளிவாய்க்கால் போரின் வெற்றியை அந்தப் பகுதியில் இராணுவத்தினர் இராணுவத்தின் சிலை ஒன்றை நிறுவி ஞாபகப்படுத்தி வருகின்றனர்.
ஆனையிறவிலும் வெற்றிக்கான அடையாளத்தை இராணுவம் நிறுவியுள்ளது. அப்படி இருக்கையில் தமது இழப்புக்களினதும், துயரங்களினதும், வலிகளினதும் அடையாளமாகவும் போரின் சாட்சியாகவும் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் வட்டுவாகல் பாலத்தையும், முள்ளிவாய்க்கால் மண்ணையும் பாதிக்கப்பட்ட மக்கள் பார்ப்பதில் தவறில்லை.
அது போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஆறுதலாகவும் அமையும். ஆனால், மனங்காயங்களுடன் வாழும் இந்த மக்களை ஆற்றுப்படுத்தக் கூடிய வகையில் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதே வேதனையான விடயம்.

இந்த நிலையிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் இந்த மண்ணில் நடைபெற உள்ளது.
இந்தப் பகுதியில் இறந்த மக்களின் நினைவாக கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் நினைவுக்கல் படிமங்கள் நாட்டப்பட்டுள்ளது. பொது நினைவேந்தல் திடலில் ஒரு அஞ்சலி தூபி நிறுவப்பட்டுள்ளது. அதுவே ஒட்டுமொத்த மக்களின் அஞ்சலிக்கான திடலாகவும் உள்ளது.
மக்கள் தமது மனக்காயங்களை ஆற்ற அழுது புலம்பி அஞ்சலி செலுத்த தயராகி வருகின்றார்கள். கட்சி, அரசியல் என்பன கடந்து குருதியால் தோய்ந்த அந்த மண் இன்று ஒட்டுமொத்த மக்களின் கண்ணீரால் கழுவப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இதற்கான நீதி தான் இன்றுவரை எட்டாக்கனியாகவே இருக்கிறது. மக்கள் நம்பியவர்களும் ஏமாற்றிவிட கடவுளும் கைவிட்ட நிலையில் நீதிக்கான ஏக்கம் மட்டுமே எஞ்சி நிற்கிறது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 50 நிமிடங்கள் முன்
செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்... சந்தோஷத்தில் சூர்யா வெளியிட்ட செம வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam