ராஜபக்சவுக்கு சார்பான தேரர் கட்சியிலிருந்து விலகி தெரிவித்த பரபரப்பான கருத்துக்கள்
பலாங்கொடை கஸ்ஸப தேரர் சிறையில் இருக்கும் போது அவரை விடுவிப்பதற்காக பயங்கரமாக இனவாதத்தை விதைத்த மொட்டு கட்சியின் கலென்பிந்துனுவெவ பிரதேச சபையின் உறுப்பினராக கடமையாற்றிய அநுராதபுர சோமரதன தேரர் கட்சியில் இருந்து விலகியுள்ளதாக இன்று (13.02.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்த போது,
ராஜபக்சக்களை கடுமையாக விமர்சித்த தேரர்
மொட்டுக் கட்சியின் அநுராதபுர அமைப்பாளராக இன்றைய நிலையில் பதவி வகிக்கும் திஸ்ஸ குட்டியாரச்சி மற்றும் அவர்களின் அமைப்பாளர்கள் பௌத்த பிக்கு என்ற வகையில் எனக்கு மரியாதை கொடுக்காமல் நீ- வா-போ என்று ஒருமையில் கதைத்து அவமானப்படுத்தினர்.
யாருக்கும் மதிபளிப்பதில்லை.அரசியல் செயற்பாட்டில் ஈடுபடும் போது பதவி போட்டிகளில் பாரிய வெட்டு குத்துக்கள் நடப்பது சகஜமாகும். அரசியலில் நீண்டகால நண்பருமில்லை எதிரியும் இல்லை.

கடந்த தேர்தல்களில் இந்த பிரதேசத்தில் அதிக வாக்குகளை பெற்றுக் கொண்டேன். திஸ்ஸ குட்டியாரச்சியுடன் எனக்கு தனிப்பட்ட எவ்வித கோபமும் இல்லை. அவருடன் இணைந்து செற்பட முடியாது.
எமக்கு அநுராதபுரத்தில் இருக்கும் ஒருவரே பிதேசத்திற்கு தலைவராக வரவேண்டும். அநுராதபுர மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு பதுளையில் போய் சந்திக்க முடியாது.
திஸ்ஸ குட்டி பற்றி அநுராதபுர மக்களிடம் கேட்டால் தெரியும் அவர் யார் என்று. எங்கு சென்றாலும் சிக்கலில் மாட்டிக் கொள்வார். அவருக்கு 'பிஸ்ஸ குட்டி' பைத்தியக்குட்டி என்றுதான் சொல்லுவார்கள்.

அநுராதபுரத்திற்கு சிறந்த ஒரு தலைவரை தாருங்கள் என்று கட்சியை உருவாக்கியவர்கள் தொடக்கம் வரப்போகும் தலைவர் வரை கேட்டுக் கொண்டேன். ஆனால் கணக்கிலெடுக்கவில்லை. இதனால் கட்சியில் இருந்து விலகி திலித்துடன் இணைந்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.