ராஜபக்ச ஆதரவாளர்களின் கூட்டணியே புதிய அரசாங்கம்: அரசியல்வாதிகளின் கருத்து
நாட்டின் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (21) பதவியேற்றார். இதனை தொடர்ந்து, ஜனாதிபதி தலைமையில் இன்று (22) காலை பிரதமராக தினேஷ் குணவர்தனவும் 18 புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இது தொடர்பாக எமது ஊடகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுளை தொடர்பு கொண்ட போது அவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
வேலுசாமி இராதாகிருஷ்ணனின் கருத்து
புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுப் பதவிகள் கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“பதவியேற்ற புதிய அமைச்சர்கள் அனைவரும் ராஜபக்ச ஆதரவாளர்களே. புது முகங்கள் எவருக்கும் பதவிகள் வழங்கப்படவில்லை. ராஜபக்ச அரசாங்கத்தின் பின் ராஜபக்ச ஆதரவாளர்கள் ரணிலின் தலைமையில் பதவியேற்றுள்ளனர். மொட்டு அரசாங்கம் மீண்டும் ஆட்சியில் இறங்கியுள்ளது.
இது நாட்டில் எதிர்ப்பார்த்த எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஜனாதிபதியின் பேரில் மாத்திரமே மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனை தவிர ஜனாதிபதி மாறவில்லை.
மேலும், இன்று அதிகாலை காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதல், அரசாங்கத்தின் அடக்குமுறையை காட்டுகின்றது” என தெரிவித்தார்.
சிவஞானம் சிறீதரனின் கருத்து
புதிய அமைச்சரவையும், அமைச்சர்களின் பதவியேற்றமும் ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,
”சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டிய நிலையில், இப்போது அமைக்கப்பட்டிப்பது சுயநலமான ஒரு அரசாங்கம். புதிய ஜனாதிபதி அவர் சுயவிருப்பத்தின்படியே இந்த அரசாங்கத்தை அமைத்துள்ளார்.
புதிய ஜனாதிபதியும் ஜனநாயகத்துக்கு எதிராகவே தெரிவு செய்யப்பட்டுள்ளார். மக்கள் ஆதரவு அவருக்கு இல்லை. வரலாறு உரிய பாடத்தை உரிய நேரத்தில் அவருக்கு கற்பிக்கும்.
மேலும், அமைதியான போராட்டக்காரர்கள் மீது வன்முறையை பிரயோகித்தது மிக மோசமான ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்” என தெரிவித்தார்.