எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!
எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் தாழமுக்க நிலை உருவாகி வருவதாகவும், இதனால் நாட்டின் அநேக பகுதிகளுக்கு மழை பெய்யும் சாத்தியம் உண்டு எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை பெய்யும் எனவும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மழை பெய்யும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேல், சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் இடியுடன்கூடிய மழை பெய்யும் சாத்தியம் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, காலி, களுத்துறை, மாத்தறை மாவட்டங்களில் 75 மில்லி மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழையும், ஊவா மாகாணத்தின் சில பகுதிகளிலும் அம்பாறை, மாத்தறை, நுவரெலியா, மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 50 மில்லி மீற்றர் மழையும் பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.