புகையிரத வீதிகள் சரியான திட்டமிடல்கள் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளன : செல்வராசா கஜேந்திரன்
புகையிரத வீதிகள் பெரிய அணைக்கட்டு போன்று அமைக்கப்பட்டுள்ளமையால் வெள்ளம் வரும் காலங்களிலே அந்த வெல்ல நீரை எவ்வாறு வெளியேற்றுவது என்பது தொடர்பான சரியான திட்டமிடல்கள் இல்லாமலேயே இவை அமைக்கப்பட்டுள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றங்களூடாகவும் கணிசமான வீதிகள் புனரமைப்பு செய்யப்படுகின்றன. அந்த உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தகுதியான நிபுணர்கள் நியமிக்கப்படாதவிடத்து தொழில்நுட்ப உத்தியோகத்தர்களால் தான் அந்த வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகிறது அல்லது புனரமைப்பு செய்யப்படுகிறது.
அவர்களிடமும் இந்த நிலைபேறு தொடர்பான கனவுகளும், தெளிவுகளும் இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் புகையிரத வீதிகள், நெடுஞ்சாலைகள், உள்ளக வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்ற பொழுது வெள்ளம் வருகின்ற காலங்களிலே பாரிய அழிவுகளை எங்களுடைய சமூகம் சந்திக்க வேண்டியிருக்கிறது.
தென்னிலங்கை பற்றி எனக்குத் தெரியாது வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையிலே இவ்வாறான பாதிப்புக்களை நடைமுறை ரீதியாக நாங்கள் சந்தித்திருக்கிறோம். புகையிரத வீதிகள் சரியான திட்டமிடல்கள் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளன.
பல பகுதிகளிலும் புகையிரத வீதிகள் பெரிய அணைக்கட்டு போன்று அமைக்கப்பட்டுள்ளமையால் வெள்ளம் வரும் காலங்களிலே அந்த வெல்ல நீரை எவ்வாறு வெளியேற்றுவது என்பது தொடர்பான சரியான திட்டமிடல்கள் இல்லாமலேயே இவை அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.