தேர்தல்கள் ஆணைக்குழுவால் மட்டும் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது- ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வலியுறுத்தல்
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மாத்திரம் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாகாண சபை உள்ளிட்ட தேர்தல்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சி
நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய அரசின் முத்துறைகளுடன் அரசியல் கட்சிகள், சிவில் சமூகத்தினர் மற்றும் ஒட்டுமொத்த மக்களும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் செயற்பாட்டில் பங்கேற்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயக ஆட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் பங்களிப்பு மாத்திரம் போதுமானதல்ல என சுட்டிக்காட்டிய அவர், ஜனநாயக விழுமியங்களையும் தேர்தல் செயற்பாடுகளையும் பாதுகாப்பதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பொறுப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு அரச நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.