நாடாளுமன்ற உறுப்பினர்களை வேட்டையாடும் அரசாங்கம்! எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதை தடுத்து நிறுத்தும் நோக்கில் அவர்கள் வேட்டையாடப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு நேரடியான பங்களிப்பை வழங்கும் சந்தர்ப்பத்தை தடுக்க எந்த காரணங்களையும் கூறாது தன்னை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைத்துள்ளமை நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை தொடர்பான கேள்வியை எழுப்பி அவர் இதனை கூறியுள்ளார்.
குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணனி தடயவியல் பிரிவு மேற்கொண்டு வரும் விசாரணை சம்பந்தமான தகவல்களை பெற்றுக்கொள்ள டிஜிட்டல் தடயவியல் ஆய்வுக் கூடத்தின் பொறுப்பதிகாரியை சந்திப்பதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜராகுமாறு நாராஹென்பிட்டி பொலிஸ் நிலையம் ஊடாக எனக்கு அழைப்பு கிடைத்தது.
யார் செய்த முறைப்பாட்டுக்கு அமைய எந்த காரணத்திற்காக விசாரணைக்கான தகவல்களை என்னிடம் பெற எதிர்பார்க்கின்றனர் என்பது குறித்து கூறவில்லை.
எவ்வித காரணங்களும் கூறாது குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைத்தமை சிவில் பிரஜை என்ற வகையில் எனது உரிமைகளை மீறும் நடவடிக்கை என்பதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனது சிறப்புரிமையை மீறும் செயல்
அத்துடன் இந்த விதமாக எவ்வித காரணமும் அறிவிக்காது குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவித்துள்ளமையானது நாட்டில் அமுலில் இருக்கும் பொதுச் சட்டத்தை மீறிச் செல்லும் நடவடிக்கை எனவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.