வடமாகாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்!
வடமாகாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண மக்கள் அனைவருக்கும் தற்போது பிறந்திருக்கின்ற 2021 ஆம் ஆண்டு சாந்தியும், சமாதானமும் மிக்க ஆண்டாக திகழ வாழ்த்துக்கள். கடந்த வருடம் உலகத்தினை அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் அச்சத்துடன் கடந்து சென்றுள்ளது.
அதேபோல் எதிர்வரும் காலத்திலும் உலக நியதிக்கு இணங்க வடபகுதியிலும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்குரிய கட்டுப்பாடுகள் நடைமுறைகளை பின்பற்றி பொது மக்களைசெயற்படுத்துவதற்கு பொலிசார் பூரண ஒத்துழைப்பினை வழங்குவார்கள்.
அதேபோல வடக்கு மாகாணத்தில் கடந்த வருடத்தை விட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்குரிய மேலதிகமான சில வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.
பொது மக்களை நல்வழிப்படுத்தி குற்றச்செயல்களை தடுத்து வடக்கு மாகாணத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதே எமது நோக்கமாக காணப்படுகின்றது.
அத்துடன் வடமாகாணத்தில் தற்போது இடம்பெறுகின்ற சில கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகள் தொடர்பில் முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து அதனை கட்டுப்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
அந்த நடவடிக்கை மேலும் விரிவாக்கப்பட்டு சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தி பொது மக்கள் சுதந்திரமாக வாழ பொலிசார் பூரண ஒத்துழைப்பினை வழங்குவார்கள்.
அதேபோல பொதுமக்களுக்கு ஒரு அழைப்பினை விடுக்க விரும்புகின்றேன். அதாவது சட்டவிரோத செயற்பாடுகள் போதைப்பொருள் மற்றும் கொள்ளை செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் ஏதாவது தகவல்கள் அறிந்திருந்தால் அதனை தெரியப்படுத்தினால் சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.