சுரேஷ் சாலேவுக்கு எதிரான அநீதிக்கு போராட்டம் வெடிக்கும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் பட்சத்தில், நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ள "சட்ட ரீதியாக நிரபராதி என நிரூபிப்பதற்கான உரிமை" அவருக்கும் கிடைக்க வேண்டும் என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர வலியுறுத்தியுள்ளார்.
இந்தியத் தூதரகத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே, சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைமையகத்துக்கு வருகை தந்து, அதன் தலைவர் திலித் ஜயவீர மற்றும் செயற்குழு உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
சுரேஷ் சாலேவின் நிலைமை
"மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தொடர்பில் தற்போது எழுந்துள்ள நிலைமையை, சாதாரண ஒருவருக்கு எதிரான தடுப்புக்காவல் உத்தரவாக மாத்திரம் சுருக்கிப் பார்க்க முடியாது.

இந்நாட்டின் கொடூரமான பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றிய ஒரு வீரமிக்க அதிகாரியாகவே அவரை நாம் பார்க்கின்றோம்.
அத்தகைய ஒருவருக்குரிய கௌரவம் நாட்டு மக்கள் மத்தியில் பேணப்பட வேண்டும். தற்போதைய நிலையில் அவர் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகைய செயற்பாடுகளினால் நாட்டின் சட்டக் கட்டமைப்பின் மீதுள்ள நம்பிக்கை மாத்திரமன்றி, பெரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய முப்படையினரின் மன உறுதியும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
தடுத்துவைப்புக்காவல் சட்டங்கள்
தடுத்துவைப்புக் காவல் சட்டங்களை இவ்வளவு கொடூரமாகப் பயன்படுத்திய வரலாறு இதற்கு முன்னர் இருந்ததில்லை. தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இச்சட்டங்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்போவதில்லை என வாக்குறுதி அளித்தவர்கள், இன்று தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்தவும் இத்தகைய அடாவடித்தனங்களில் ஈடுபடுகின்றனர். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக தேசிய மட்டத்திலான போராட்டங்களை முன்னெடுக்க எமது கட்சி தயாராகி வருகின்றது.
அதேவேளை, நாட்டின் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை அரசுக்குத் தேவையான வகையில் நீடிப்பது என்பது, நீதித்துறையின் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலாகும். அரசு இதனை ஒரு 'இலஞ்சமாக பயன்படுத்தித் தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற முனைகின்றது.
இத்தகைய தன்னிச்சையான பதவிக்கால நீட்டிப்பை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து சட்டத்துறை சார்ந்த அனைவரையும் ஒன்றிணைத்துப் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.