முல்லைத்தீவு பாடசாலையொன்றில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்ற நிலை
முல்லைத்தீவு - பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியரை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்களால் போராட்டமொன்று இன்றையதினம்(23) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்துள்ளனர்.
போராட்டம்
இந்த பாடசாலையின் கற்றல் கற்பித்தல்களில் காணப்படும் இடர்பாடுகளால் பல மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறி வேறு பாடசாலைக்கு சென்றுள்ளதாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், முன்னதாக பாடசாலையில் முறையற்ற நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் மாணவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் அங்கு வந்த பாடசாலை அதிபர் மாணவர்களை தாக்கியதை அடுத்து பெற்றோருக்கும் பாடசாலை சமூக்திற்கும் முறுகல் நிலை ஏற்பட்டதால் அங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
உரிய தீர்வு
உரிய தீர்வை வழங்க கோரி வலயக் கல்வித் திணைக்கள அதிகாரிகளின் பயணித்த வாகனத்தை தடுத்து நிறுத்தி இன்று மாலை வரை மாணவர்களின் போராட்டமும் பெற்றோர்களின் போராட்டம் இடம் பெற்றதுடன் பாடசாலையின் அதிபர் பொலிசாரின் பாதுகாப்புடன் பாடசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் துணுக்காய் வலயக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் பாடசாலைக்கு சென்று பாடசாலை மாணவர்களுடனும் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இருந்த போதும் சுமூகமான தீர்வு எட்டப்படாத நிலையில், ஏற்கனவே கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் இது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு எந்த விதமான தீர்வுகளும் வழங்கப்படவில்லை என்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்து பெற்றோர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன் வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகளின் வாகனத்தையும் தடுத்து நிறுத்தியதுடன் போராட்டமானது பிற்பகல் 5 மணி வரை இடம்பெற்றதுடன் பொலிஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அதிபரும் பாடசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.


