தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணி விடுவிப்பு: இராணுவ முகாமிற்கு முன்பாக மக்கள் போராட்டம் (Video)
புதிய இணைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க கோரி இன்று (11.11.2023) காலை 9.30 மணியளவில் இராணுவ முகாமிற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியில் பாரிய பிரதேசத்தை இலங்கை இராணுவத்தின் 14 SLNG படைப்பிரிவு கையகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கு இடவசதி இன்றியும் தமது உறவுகளை புதைத்த இடத்தில் அஞ்சலி செலுத்த முடியாத நிலை உறவுகளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மாவீரர் துயிலும் இல்லக் காணியில் இருந்து இராணுவத்தை வெளியேறுமாறு பல தடவைகள் அழுத்தம் கொடுத்தும் இதுவரை பயன்கிட்டவில்லை இந்நிலையில் இராணுவத்தை வெளியேறுமாறு கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பதாதைகளை தாங்கியவாறு போராட்டம்
கல்லறைகளை வழிபட வழிவிடு கல்லறைகள் மேலிருந்து இராணுவமே வெளியேறு, மிதிக்காதே மிதிக்காதே புனிதர்களை மிதிக்காதே, அழவிடு அழவிடு அம்மாக்களை அழவிடு, விளக்கேற்றுவோம் விளக்கேற்றுவோம் பிள்ளைகளுக்கு விளக்கேற்றுவோம், கல்லறைகளை அழிப்பதும் புத்தனின் போதனையா போன்ற பல்வேறு வாசகங்களையுடைய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், முன்னாள் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேலமாலிதன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து
கொண்டிருந்தனர்.
முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் இராணுவத்தினரால் பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
போராட்டம் இன்று (11.11.2023) நடைபெற உள்ள நிலையில், குறித்த பதாகையில் இராணுவத்துக்குரிய பிரதேசம் உட்செல்ல தடை என எழுதப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மக்களின் உரிமைப் போரில் உயிரிழந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்.
அஞ்சலி செலுத்த முடியாத நிலை
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியில் பாரிய பிரதேசத்தை இலங்கை இராணுவத்தின் 14 SLNG படைப்பிரிவு கையகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கு இடவசதி இன்றியும் தமது உறவுகளை புதைத்த இடத்தில் அஞ்சலி செலுத்த முடியாத நிலை உறவுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், குறித்த பகுதியில் இருந்து இராணுவத்தை வெளியேறுமாறு கோரி இன்று (11) அமைதிவழிப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. இப் போராட்டம் இன்று 11 ஆம் திகதி காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும் இதில் அனைவரையும் அணிதிரளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மாவீரர் துயிலும் இல்லக் காணியில் இருந்து இராணுவத்தை வெளியேறுமாறு பல தடவைகள் அழுத்தம் கொடுத்தும் இதுவரை பயன்கிட்டவில்லை எனவும் இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைவரையும் இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் குறித்த பதாகை இராணுவத்தினால் வைக்கப்பட்டுள்ளதோடு அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


















