ஜனாதிபதி செயலகம் முன்பாக தொடரும் போராட்டம்! சஜித் நேரில் விஜயம்
கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்து வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்ட இடத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விஜயம் மேற்கொண்டார்.
நீண்ட காலமாகத் தீர்வு கிடைக்காத கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தும் நோக்கில் இந்தப் போராட்டம் தொடரப்பட்டு வருகிறது.

குறித்த போராட்ட இடத்திற்கு நேற்று வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கல்வித் துறையின் முக்கிய தூண்களாக இருப்பதால், அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் கடமை என்று அவர் குறிப்பிட்டார்.
கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சி ஆதரவு
மேலும், கல்வித் துறையுடன் தொடர்புடைய பணியாளர்களின் பிரச்சினைகளை அலட்சியப்படுத்தும் அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது என்றும், இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு விரைவான தீர்வு காண அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என்றும், தேவையான அரசியல் அழுத்தங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இதனிடையே, தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரப்போவதாக ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.