பொலிஸாரின் நடவடிக்கையை கண்டித்து முல்லைத்தீவில் போராட்டத்திற்கு அழைப்பு
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவியினை பொலிஸார் கைது செய்துள்ளமையினை கண்டித்து பாரிய ஒரு போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இன்று (06.01.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்ப்பு நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"எதிர்வரும் திங்கட்கிழமை(08) முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்றினை நடாத்தவுள்ளோம்.
இந்த கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு எங்களுக்கான முடிவுகளை எடுக்கவேண்டும்.
பல நெருக்கடிக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை இல்லாமல் செய்வதற்காக பல வழிகளில் முனைகின்றார்கள்.
இதனை தடுத்து நிறுத்த வேண்டுமாக இருந்தால் எங்களுக்கான முடிவுகளை நாங்கள் எடுக்கவேண்டும்.
புலனாய்வுத்துறையின் அச்சுறுத்தல்கள்
இதற்காக நாங்கள் ஒன்று கூடுவதற்கு இடங்கள் கேட்டால் புலனாய்வுத்துறைகளால் இடம் கொடுக்காதீர்கள், சாப்பாடு கொடுக்காதீர்கள் என்று அச்சுறுத்தப்படுகின்றார்கள்.
இந்த நிலையில் நாங்கள் யாரிடமும் இடம் கேட்க போகாமல் நாங்களே முடிவெடுத்து எங்களுக்கான இடத்தினை நாங்கள் தெரிவு செய்துள்ளோம்.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. அவரின் முன்னால் தான் எங்கள் உறவுளை நாங்கள் கொடுத்தோம்.
அம்மாள் ஆச்சியின் சாட்சியாக நாங்கள் அந்த இடத்தில் பொதுக்கூட்டம் ஒன்றினை கூட உள்ளோம். இதில் அனைவரும் ஒன்று சேரவேண்டும்.
பாரிய ஒரு போராட்டம்
எதிர்வரும் திங்கட்கிழமை (08.01.2024) காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாரிய ஒரு போராட்டத்தினையும் முன்னெடுக்கவுள்ளோம்.
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவியினை பொலிஸார் கைது செய்துள்ளமையினை கண்டித்தும் பொலிஸாரின் அடாவடித்தனத்தினை கண்டித்தும் இந்த போராட்டத்தினை நடத்தவுள்ளோம்.
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பொலிஸார் அடக்குவதையும் நிறுத்தவேண்டும் என்றும் இந்த போராட்டம் முன்னெடுக்கவுள்ளோம்.
இதில் தேசியத்திற்காக பயணிப்பவர்கள், அரசியல் பிரதிநிதிகள், அமைப்புக்கள் என அனைவரும் அணிதிரள வேண்டும்” என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |