மதுபானசாலையை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி போராட்டம்(Video)
நுவரெலியா - வலப்பனை, நில்தண்டாஹின்னா நகரில் மற்றுமொரு மதுபானசாலையை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி நில்தண்டாஹின்னா நகரில் இன்று (01.12.2022) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மதுபானசாலை திறப்பு
நில்தண்டாஹின்னா நகர வாசிகளும், அதனை சூழவுள்ள கிராமங்களில் வாழும் மக்களும் இணைந்தே இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நில்தண்டாஹின்னா நகரில் ஏற்கனவே மதுபானசாலையொன்று உள்ள நிலையில், மற்றுமொரு மதுபானசாலையை திறப்பதற்கு அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இப்பகுதியில் சமூக நெருக்கடி - பிரச்சினைகள் உருவாகலாம் எனவும், இளைய சமூதாயம் சீரழிக்கப்படலாம் எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மக்களின் கேள்வி
குறித்த நகரத்துக்கு பல அத்தியாவசிய விடயங்கள் தேவைப்படும் நிலையில் எதற்காக மதுபானசாலை திறப்பதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட வேண்டும் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளை மதுபானசாலை திறப்பதற்கான அனுமதி பத்திரம் இரத்து செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இப்போராட்டத்தால் நில்தண்டாஹின்னா நகரின் இயல்பு நிலை ஸ்தம்பிதமடைந்ததுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.