வடக்கு ஆளுநர் செயலக முன்றலில் போராட்டம்
நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் வடக்கு ஆளுநர் செயலக முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றிய 970 பேரில் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் எடுத்த முயற்சியின் பயனாக 349 பேருக்கு அவர்களது சேவை கால அடிப்படையில் அரச நியமனத்திற்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அதில் ஏனையோருக்கு நியமனம் வழங்கப்படாத நிலையில் தமக்கும் குறித்த நியமனத்தை வழங்குமாறு கோரி இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
நாமும் நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் சுகாதார தொண்டர்களாக கடமையாற்றியிருக்கிறோம். மொத்தமாக 970 பேர் வடக்கு மாகாணத்தில் உள்ளோம்.
ஆனால் 349 பேருக்கு மாத்திரமே நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டு தற்போது அவர்களுக்குரிய நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனினும்
நாம் வைக்கின்ற கோரிக்கை என்னவென்றால் வட மாகாணத்தில் உள்ள 970 சுகாதார தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு தற்போது வட மாகாணத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியே போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

