தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பு! வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி முல்லைத்தீவை சென்றடைந்தது! (Photos)
யாழில் இருந்து தொடங்கிய பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கிழக்கு நோக்கிய தொடர் கவனயீர்ப்பு பேரணி இன்று முல்லைத்தீவு நகரினை வந்தடைந்துள்ளது.
முல்லைத்தீவில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு நகரம் ஊடாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியினை சென்றடைந்து அங்கு இறுதிப்போரில் இலங்கை அரசின் இனப்படுகொலையின் போது உயிர்நீர்த்த மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் உயிரிழந்த மக்கள் நினைவாக சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வட்டுவாகல் பாலத்தில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரும், வட்டுவாகல் மக்களும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து பேரணியுடன் கைகோர்த்து வட்டுவாகல் பாலம் ஊடாக முல்லைத்தீவு நகரினை சென்றடைந்துள்ளனர்.
இந்த பேரணிக்கு பெருமளவான இளைஞர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் வணிக நிலைய உரிமையாளர் என பலரும் தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் இருந்து கிழக்கு வரை இடம்பெற்று வரும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் இன்று ஊர்வலம் இடம்பெற்றுள்ளது.
யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலைகழக முன்றலிலிருந்து நேற்று (04.02.2023) ஆரம்பமாகிய இப்பேரணி, இரணைமடுவில் இருந்து இன்று முல்லைத்தீவை நோக்கி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
ஒன்றிணைந்து பேரணி
தமிழர்களின் அடிப்படை உரிமைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றை வென்றெடுக்கும் நோக்கில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சமூக அமைப்புகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒன்றிணைந்து இந்த பேரணியை ஆரம்பித்திருந்தார்கள்.
இந்நிலையில் இன்று வவுனியாவில் இருந்து பேரணியில் இணைந்து கொள்ள வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இருந்து ஆரம்பித்து புதிய பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்று அங்கிருந்து பேருந்தில் பேரணிக்கு சென்றுள்ளனர்.
இதன்போது முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
