பாடகர் சங்கீத்சன் விடுதலைக்காக போராடும் தமிழர்கள் - பதாகையால் மன்னாரில் எழுந்த சர்ச்சை
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகவும் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று(11.06.2026) நடந்து முடிந்த போராட்டத்தை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கீத்சன் கைது
குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள்,மன்னார் பிரஜைகள் குழு,மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை சங்கத்தினர், அரசியல் பிரதிநிதிகள்,பெண்கள் அமைப்புக்கள் உள்ளடங்களாக நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர்கள் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக சொல்லிசை பாடகர் சங்கீத்சன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி வேண்டியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை இந்த நாட்டிலே இல்லாது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கை
குறிப்பாக இந்த நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும், கைது செய்யப்பட்ட பாடகர் சங்கீத்சன் உட்பட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறையில் உள்ள அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இதற்கு ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அமைதியான முறையில் பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்ட நிலையில் திடீர் என குறித்த பகுதிக்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் பதாகை ஒன்றில் எழுதப்பட்ட வசனம் ஒன்று குறித்து சிறிது நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
“அரசே பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு..” என எழுதப்பட்ட குறித்த வசனத்தை தவறான முறையில் விளங்கிக் கொண்டமையினால் குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த பதாதையில் தமிழில் எழுதப்பட்ட வசனம் சிங்கள மொழியில் வாசித்துக் காட்டப் பட்ட நிலையில், பொலிஸார் அந்த விடத்தில் இருந்து சென்றுள்ளனர்.



