காணிகளை இழந்த மக்களாக எமது அகதி வாழ்க்கை போதும்! ஜனாதிபதி செயலகம் முன்னால் போராட்டம்
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள விடுவிக்கப்படாத நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் இன்றைய தினம் போராட்டமொன்று நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் இன்று காலை அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டம்
எமது பூர்வீக நிலத்தை மீள எம்மிடம் ஒப்படையுங்கள்” என்பதை பிரதானமாக வலியுறுத்தி இந்த போராட்டம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் உள்ள பாரம்பரிய நிலங்களை இலங்கை அரச படைகளிடம் இருந்து விடுவிக்க வலியுறுத்தப்பட்டது.
இதன்போது, 'மண்ணாசை துறந்த புத்தரின் பிள்ளைகளுக்கு மாற்று இனத்தவரின் மண்ணில் ஏன் ஆசை?, எமது மக்கள் வாழ்வாதாரம் இழந்து வாட அரச படைகள் இலாபம் ஈட்டுவது முறையா? , பூர்வீக காணிகளை இழந்த மக்களாக எமது அகதி வாழ்க்கை போதும்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி மக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொலிஸார் குவிப்பு
மன்னார் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த போராட்டத்தில், விடுவிக்கப்படாத காணிகளின் உரிமையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்றனர்.
போராட்டம் நடைபெற்ற பகுதியில் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்கள், எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







