களி மண் அகழ்வினால் அழிவடையும் விவசாய நிலங்கள்!மருதங்கேணியில் கவனயீர்ப்பு போராட்டம்
மேய்ச்சல் தரைகளையும், விவசாய நிலங்களையும் களி மண் அகழ்வு மூலம் நாசப்படுத்தியதாக தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமாது இன்று (24) முற்பகல் குடாரப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நாகர் கோவில் தெற்கு, குடாரப்பு கிராமத்தில் விவசாய நிலங்கள், தனியாருக்குச் சொந்தமான காணிகளில் சட்ட விரோதமாகவும், அனுமதி வழங்கப்பட்டும் மண் அகழ்வு இடம்பெற்று வருகிறது.
மருதங்கேணி பிரதேச செயலகத்தால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு மண் அகழ்வு திட்ட மிட்ட வகையில் இடம்பெறுகிறது.
இது அரச காணிகள் அல்ல எனவும் தனியாருக்குச் சொந்தமான தோட்டக்காணிகளாகும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சொந்தமான காணிகளிலும் இவ்வாறு களி மண் அகழ்வு இடம்பெறுகின்றது.
இவை அனைத்தையும் கவனத்தில் கொள்ளாது மருதங்கேணி பிரதேச செயலாளர் அனுமதிப் பத்திரத்தை வழங்கியுள்ளதாகவும், இதற்கு அரசியல்வாதிகள் சிலரும் உடந்தையாக உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அனுமதிப்பத்திரத்துடன் உழவியந்திரங்களில் களிமண் அகழ்வில் ஈடுபட்ட போது அப்பகுதி மக்கள் தமது எதிர்பை வெளிப்படுத்தியதன் காரணமாக தற்காலிகமாக களி மண் அகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது.
அப்பகுதியில் களி மண் அகழ்வினால் பாரிய கிடங்குகள் ஏற்பட்டு நீர் தேங்குமிடமாக காணப்படுகிறது. குறித்த பகுதியினை மழை காலங்களில் கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக விவசாயிகள் பயன்படுத்தும் மேய்ச்சல் தரையும் மண் அகழ்வினால் அழிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் இத் காணிகள் பாரியளவில் மண் அகழப்பட்டு அருகில் உள்ள அணைகளினால் உவர் நீர் விவசாய நிலங்களுக்குள் உட்புந்து வயல் நிலங்கள் உவராகி வயல் விதைக்புக்களையும் செய்ய முடியாது கைவிட்டுள்ளனர்.
எனவே தமது விவசாய நிலங்களை பாதுகாக்குமாறும், மேய்ச்சல் தரைகளை இல்லாதொழிக்கும் இத் திட்டத்தை உடன் கைவிடுமாறு விவசாயிகள் கவனயீர்பு போராட்டத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.