ஏறாவூரில் ஆடைத்தொழிற்சாலைகள் மீதான தாக்குதலை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் (Photos)
மட்டக்களப்பு - ஏறாவூரில் அமைந்துள்ள மூன்று ஆடைத் தொழிற்சாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த கவனஈர்ப்பு போராட்டத்தில் ஏறாவூர் - புன்னைக்குடா வீதியை அண்டி அமைந்துள்ள தாக்குதலுக்குள்ளான மூன்று ஆடைத்தொழிற்சாலைப் பணியாளர்கள் சுமார் 500 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
தளவாய் லூத்தாஹ் ஆயத்த ஆடைத் தொழிற்சாலையிலிருந்து புறப்பட்ட பணியாளர்கள் ஏறாவூர் பொலிஸார் வன்முறையாளர்களைக் கைது செய்ய வேண்டுமெனக் கோரி புன்னைக்குடா வீதி வழியே ஏறாவூர் பொலிஸ் நிலையம் வரை நடைபவனியாக இந்த கவனஈர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த மூன்று ஆடைத் தொழிற்சாலைகளும் கடந்த செவ்வாய்க்கிழமை (10) வன்முறைக் கும்பலால் தாக்கி சேதமாக்கப்பட்டதுடன், அங்கிருந்த அதி நவீன ஆடைத் தொழில் இயந்திரங்கள் மின் பிறப்பாக்கிகள் ஜன்னல் கண்ணாடிகள் உட்பட ஏனைய உபகரணங்களும் அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டிருந்தன. புன்னைக்குடா வீதியிலுள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலை மீண்டும் இயங்க முடியாதளவிற்கு சேதமாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று தளர்த்தப்பட்டதையடுத்து ஆடைத் தொழிற்சாலைக்கு மீண்டும் பணிக்குத் திரும்பிய பணியாளர்கள் தமது ஆடைத் தொழிற்சாலைகள் சேதமாக்கி அழிக்கப்பட்டிருப்பதைக் கண்டு சம்பந்தப்பட்ட வன்முறையாளர்களைக் கைது செய்து செய்யுமாறு கோரி கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போராட்டத்தின்போது “நீதி நிலைநாட்டப்பட வேண்டும்”, “ஏழைகளின் வாழ்வாதாரத்தை அழித்தொழிக்கும் வன்முறையாளர்களை கைது செய்”, “வன்முறை நிறுத்தப்பட வேண்டும்”, “எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்”, “அரசியலுக்கும் ஆடைத் தொழிற்சாலைக்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள்கள்” உள்ளிட்ட இன்னும் பல வாசகங்களை கொண்ட பதாதைகளை போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த பேரணியை இடை வழி மறித்த பொலிஸ் அதிகாரிகளும், படையினரும் போராட்டக்காரர்களின்கோரிக்கையை ஏற்பதாகவும், வன்முறையில் ஈடுபட்டோரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பலரைக் கைது செய்யும் தமது நுணுக்கமான நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்புக் கிடைத்து வருவதாகவும், சிசிடிவி காணொளி ஆதாரங்களுடன் வன்முறைக் கும்பலைக் கைது செய்யும் சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், கவனஈர்ப்புப் போராட்டக்காரர்களைக் கலைந்து செல்லுமாறும் வேண்டிக் கொண்டனர்.
இதனையடுத்து கவனஈர்ப்புப் போராட்டக்காரர்கள் மீண்டும் தமது ஆடைத் தொழிற்சாலைகளுக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.