மன்னார் அன்புச்சகோதரர் இல்லத்தில் இடம்பெற்று வரும் தொடர் திருட்டு சம்பவத்தை கண்டித்து போராட்டம்
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கீரி பகுதியில் அமைந்துள்ள அன்பு சகோதரர் இல்லத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவத்தைக் கண்டித்துக் குறித்த இல்லத்தில் உள்ள சிறுவர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (15) மாலை முன்னெடுத்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இல்லத்தின் தேவைக்காக வளர்க்கப்பட்டு வரும் கோழிகள் தொடர்ச்சியாகத் திருடப்படுகின்றன.
பல்வேறு தடவைகள் சுமார் 20 கோழிகள் வரை திருடிச் செல்லப்பட்டுள்ளதோடு, சிறுவர்களின் பயன்பாட்டிற்கு என இருந்த துவிச்சக்கர வண்டி ஒன்றையும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த திருட்டுச் சம்பவங்கள் குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்திலும்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த அன்பு சகோதரர் இல்லம் மன்னாரில் கடந்த 20 வருடங்களாக இயங்கி வருவதோடு, பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் சிறுவர்களைப் பராமரித்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த இல்லத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவத்தினால் குறித்த இல்லத்தில் உள்ள மாணவர்களும், இல்ல நிர்வாகத்தினரும் கவலையடைந்துள்ளனர்.
இவ்வாறான திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின்
முன் நிறுத்தப்பட வேண்டும் என நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.