ரிசாட் பதியூதீனுக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாகச் சேவையாற்றிய போது, எரிகாயங்களுடன் உயிரிழந்த 16 வயது சிறுமிக்கு நியாயம் கோரி அவருடைய சொந்த ஊரான டயகமவில் இன்றும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டயகம ஈஸ்ட் தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொழிலாளர்கள் சுமார் ஒரு மணித்தியாலயம் மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்த 16 வயது சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தோடு, இதுபோன்ற சம்பவங்கள் இனி இடம்பெறாது இருக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.