நாடளாவிய ரீதியில் அரச அலுவலகங்களில் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு முன்னெடுப்பு
புதுவருடத்தில் அரச உத்தியோகத்தர்கள் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று காலை நாடளாவிய ரீதியில் அனைது மாவட்டங்களிலுமுள்ள அரச அலுவலகங்களில் நடைபெற்றுள்ளது.
இன்றையதினம் நாடளாவிய ரீதியில் அரச ஊழியர்கள் காலை 9.00மணியில் உள்ள சுபவேளையில் தமது அலுவலகங்களில் கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் தேசிய கொடியேற்றப்பட்டு நாட்டுக்காக உயிர்நீர்த்தவர்களுக்கான இரண்டு நிமிட மௌ வணக்கத்துடன் புதிய ஆண்டுக்கான சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து புதிய ஆண்டில் அரச உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் முன்னெடுக்கவேண்டிய நடைமுறைகள்,சுபீட்சமான நாட்டினை கட்டியெழுப்புவதில் அரசாங்க உத்தியோகத்தரின் பங்கு தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் சிறப்புரையாற்றியுள்ளார்.
இதேவேளை ஓட்டமாவடி பிரதேச செயலகத்திலும் இச் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் மரநடுகையும் இடம்பெற்றிருந்தது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றியவாறு நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தி - ருஷாத் மற்றும் நவோஜ்
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 2021 புதிய புத்தாண்டை வரவேற்று கடமைகளை பொறுப்பேற்கும் சத்தியப் பிரமாண நிகழ்வு
இன்று நடைபெற்றுள்ளது. இன்று காலை மணிக்கு மாவட்ட செயலகம் முன்பாக மேற்படி சத்தியப்பிரமாண நிகழ்வு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது மாவட்ட மேலதிக அரச அதிபர் திட்டமிடல் பணிப்பாளர் உதவி திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் சத்தியபிரமான நிகழ்வு இன்று பொலிஸ் நிலைய முன்றலில் நிலையத்தின் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி தலையில் நடைபெற்றுள்ளது.
செய்தி -யது மற்றும் சுமன்
திருகோணமலை
2021 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில்நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கொவிட் வைரஸ் பரவலிற்கு மத்தியில் பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. கொவிட் வைரஸ் உலகிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதனை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படல் வேண்டும்.
கொவிட்டிற்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளை பேணி செயற்பாடுகளை மேற்கொள்ளல் வேண்டும்.அர்ப்பணிப்பு ,வினைத்திறன் ஆகியவற்றை பேணி அரச சேவையை மக்கள் நலனுள்ளதாக மாற்றியமைக்க அனைவரும் திடசங்கற்பம் பூணுமாறும் திருகோணமலைமாவட்டத்தை சகல துறைகளிலும் ஏனைய மாவட்டங்களுக்கு முன்னுதாரணமான மாவட்டமாக மாற்றியமைக்க தமது பங்களிப்பை தவறாது வழங்குமாறும் இதன்போது அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்போது அரச சேவை கடமைகளை ஆரம்பித்தல் சத்தியப்பிரமாண உறுதியுரை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செய்தி - அப்துல் சலாம் யசீம்
யாழ்ப்பாணம்
புதிய ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், 2 நிமிட மௌன அஞ்சலி மற்றும் சத்தியப்பிரமாணம் என்பன இடம்பெற்றுள்ளன.
நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் சிறப்புரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ணவின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சத்தியபிரமாணமும் எடுக்கப்பட்டுள்ளது.
செய்தி - சுமி







