சுதந்திரக் கட்சிக்குள் மீண்டும் பிரச்சினை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அந்த கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கும் கட்சியின் மேலும் சில பிரபலமான நபர்களுக்கும் இடையில் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தயாசிறி ஜயசேகர, கட்சியின் நிலைப்பாட்டுக்கு புறம்பாக சென்று கருத்துக்களை வெளியிடுவது இந்த பிரச்சினைக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில், எதிர்காலத்தில் விரிவான கூட்டணியை உருவாக்குவது குறித்து கட்சிக்குள் தற்போது பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இது சம்பந்தமான யோசனை நிறைவேற்றப்பட்டிருந்தாலும் கட்சியின் பொதுச் செயலாளரான தயாசிறி ஜயசேகர இதனை கடுமையாக எதிர்ப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
தொடர்ந்தும் அரசாங்கத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாக இருப்பதாக பேசப்படுகிறது.
இப்படியான நிலைமையில், தயாசிறி ஜயசேகரவின் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியின் எதிர்காலமும் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.