மத்தள விமான நிலையச் சேவைகளுக்கு தனியார் முதலீடு: அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றம்
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் இயக்கத்துக்கு தனியார் முதலீட்டை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரச சொத்துக்களை தனியார் மயமாக்குவது தொடர்பான முந்தைய நிலைப்பாட்டை மாற்றி,இந்த முனைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனியார் துறை முதலீடு
குறித்த விமான நிலையத்தின் பல்வேறு பிரிவுகளின் சேவைகளை மேற்கொள்வதற்காக, தனியார் முதலீட்டாளர்களை அழைக்க அரசாங்கம் ஆர்வம் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
சீனாவினால் நிதியளிக்கப்பட்டு, 2013 இல் திறக்கப்பட்டதிலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் மற்றும் தொடர்ச்சியான நிதி இழப்புகள் காரணமாக இந்த விமான நிலையம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்த அரசாங்கங்கள் விமான நிலையத்தை தனியார்மயமாக்க முயன்றன.
நடவடிக்கை
இதன்படி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம், விமான நிலையத்தை இந்தியாவின் சௌர்யா ஏரோநாட்டிக்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் ரஸ்யாவின் விமான நிலையங்கள் முகாமைத்துவ நிறுவனத்திடம் 30 ஆண்டுகளுக்கு ஒப்படைக்க முயன்றது.
இருப்பினும், சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகச் சட்டத்தின் கீழ், சில சேவைகளை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது என்பதால், இந்த நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பயணிகள் முகாமை, விமான நிலைய பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு மற்றும் சரக்கு கையாளுதல் போன்ற விமான நிலைய நடவடிக்கைகளை நடத்துவதற்கு தனியார் துறை முதலீடுகளை நாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
