உக்ரைனில் தனியார் வான் பாதுகாப்புப் படைகள் அறிமுகம்: முக்கிய உட்கட்டமைப்புகளைப் பாதுகாக்க புதிய முயற்சி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்கள் இரவு நேரங்களில் அதிகரித்து வரும் நிலையில், வணிக நிறுவனங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க 'தனியார் வான் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உக்ரைன் அரசு அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ், இதுவரை 20 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
'கார்மைன் ஸ்கை' மற்றும் 'குவார்டியா' போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது பாதுகாப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளன. இவை இடைமறிக்கும் ட்ரோன்கள் மற்றும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களை உருவாக்கி, ரஷ்ய ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தி வருகின்றன.
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி அனுமதி
இந்த தனியார் பாதுகாப்புப் படைகள் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி அனுமதியுடன், அந்நாட்டு விமானப்படையின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்போடு ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
இலக்குகளைத் தீர்மானிப்பதும், தாக்குதல் நடத்துவதற்கான இறுதி முடிவை எடுப்பதும் உக்ரைன் விமானப்படையே ஆகும். கார்மிக்கோ மற்றும் பிற தனியார் பிரிவுகள் ஏற்கனவே கார்கிவ் பிராந்தியத்தில் பல ரஷ்ய ட்ரோன்களை வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடுமையான சோதனை
குறிப்பாக, ஏப்ரல் 17 அன்று அதிநவீன 'ஷாஹெட்' ரக ட்ரோன் ஒன்றை தனியார் வான் பாதுகாப்புப் படை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் வீரர்கள் கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே பணியமர்த்தப்படுகிறார்கள். மூன்று வார காலத் தீவிரப் பயிற்சியின் மூலம் ட்ரோன் விமானிகளாக இவர்கள் மாற்றப்படுகின்றனர்.
தன்னார்வலர்களாகப் பணியாற்றும் இந்த வீரர்களுக்கு நெகிழ்வான பணிநேரம் வழங்கப்படுவதால், அவர்கள் தங்களது மற்ற சிவில் வேலைகளுக்கு மத்தியிலும் இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட முடிகிறது. அரசின் மூலோபாய வான் பாதுகாப்பிற்கு ஒரு துணையாக இருந்து, உள்ளூர் ரீதியாக முக்கிய தொழிற்சாலைகள் மற்றும் எரிசக்தி நிலையங்களைப் பாதுகாப்பதே இவர்களின் பிரதான நோக்கமாகும்.