அங்குனகொலபெலஸ்ஸ சிறையில் கைதியொருவர் உயிரிழப்பு! எட்டுக்கைதிகள் மருத்துவமனையில் அனுமதி
அங்குனகொலபெலஸ்ஸ சிறையில் மர்மக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அங்குனகொலபெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த கைதி ஒருவர் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மரணத்திற்கான காரணம்
உடல்நலக்குறைவு காரணமாக சிறைச்சாலை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறித்த கைதி அங்குனகொலபெலஸ்ஸ பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கைதி, நேற்றுமுன்தினம் (21) உயிரிழந்ததாக சிறைச்சாலையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த கைதி 45 வயதுடைய ஆண் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கைதியின் மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
மர்மக் காய்ச்சல்
இதற்கிடையே, அங்குனகொலபெலஸ்ஸ சிறையில் உள்ள கைதிகளின் சிறைக்கட்டிடம் ஒன்றில் மர்மக் காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக சிறைச்சாலையின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எட்டு கைதிகள் முதற்கட்ட சிகிச்சைக்காக அங்குனகொலபெலஸ்ஸ பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அவசர சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேறேரம் உயிரிழந்த கைதியின் மரணத்திற்குக் காரணம் காய்ச்சலா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை, மேலும் சுகாதாரப் பிரிவு இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.