யாழில் வீடு அற்ற ஊடகவியலாளர்களுக்கு வீட்டுத்திட்டத்தில் முன்னுரிமை: அங்கஜன் வேண்டுகோள்(Photo)
யாழில் நிரந்தர வீடற்ற ஊடகவியலாளர்களுக்கு அரச வீட்டுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்க வேண்டுமாறு ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும முன்னிலையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் கோரிக்கை முன்வைத்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கும் ஊடக அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடலின் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
''தற்போது ஊடகத்துறை அமைச்சராக இருக்கின்ற டளஸ் அழகப்பெரும காலத்தில் ஊடகவியலாளர்கள் தமக்கான தேவைகளை எளிதில் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என நான் நம்புகிறேன். ஏனெனில் ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும கல்வி அமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் அவரின் செயற்பாடுகள் தொடர்பில் நான் நன்கு அறிவேன்.
தீவக வலயத்தின் கல்வியை முன்னேற்ற நான் விடுத்த கோரிக்கையை ஏற்று அமைச்சின் நிதியைத் தாண்டி மடிக்கணினி பெற்றுத்தந்தமை அவரின் மக்கள் பணி செய்யும் மனப்பாங்கைப் பிரதிபலிக்கின்றது. தமிழ் ஊடகவியலாளர்கள் பல்வேறுபட்ட சவால்களைத் தாண்டி தமது பணியை முன்னெடுத்து வருகின்றார்கள்.
அவர்கள் கறுப்பு பட்டி அணிந்து இந்நிகழ்விற்கு வந்தமை அவர்களின் கடந்த காலத்தில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்களை காட்டிநிற்கிறது. அவற்றுக்கான நீதியை எதிர்பார்த்து ஒரு அடையாளமாக இங்கு வந்திருக்கிறார்கள்.
அவர்கள் கேட்கின்ற விடயம் அல்லது அவர்கள் எதிர்பார்க்கின்ற விடயம் நியாயமானதாக இருக்கின்றது. யாழில் இன்று பல ஊடகவியலாளர்கள் சொந்த இருப்பிடங்கள் இன்றி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசாங்கத்தின் வீட்டுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
ஊடகங்கள் ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக விளங்குகின்ற நிலையில் மக்களுக்குத் தேவையான விடையங்களை விடுத்து மக்களைக் குழப்பும் வகையில் செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். கோவிட் இக்கட்டான காலகட்டத்தில் ஊடகங்கள் பெரும்பங்காற்றி மக்களுக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்த்தன .
சமூக ஊடகங்களின் பங்களிப்பு அதிகமாகக் காணப்படுகின்ற நிலையில் அவற்றில் சில ஊடகங்கள் மக்களை அச்சமூட்டும் வகையில் செய்திகளை வெளியிட முனைகிறார்கள். சமூக ஊடகங்களை அரச தகவல் திணைக்களத்தின் ஊடாக பதிவு செய்வதன் மூலம் அவர்களுக்கும் பாதுகாப்பும் பலனும் கிடைக்கின்றது.
ஆகவே ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் ஊடக விழுமியங்களுடன் செய்திகளைப் பிரசுரித்து மக்களின் தேவைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்'' இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
இன் நிகழ்வில் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், அரச தகவல் திணைக்கள
பணிப்பாளர் மொகான் சமரநாயக்க,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப் பிள்ளை
மகேசன் , மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், ஊடகவியலாளர்கள் என
பலரும் கலந்து கொண்டனர்.




