பணம் செலுத்தும் வரை அச்சிட்ட வாக்குச்சீட்டுகளை வழங்க முடியாது: அரச அச்சகம்
தற்போதைக்கு அச்சிடப்பட்டுள்ள தபால் மூல வாக்குச் சீட்டுகளை அதற்கான பணம் செலுத்தப்படும் வரை விடுவிக்க முடியாது என்று அரச அச்சகம் உறுதிபடத் தெரிவித்துள்ளது
அரசாங்க அச்சக பணிப்பாளர் நாயகம் திருமதி கங்கானி கல்பனா லியனகே நேற்று (17.03.2023) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அது தொடர்பில் எழுத்துமூலமாக அறிவித்துள்ளார்.
தற்போது அச்சிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் அரசாங்க அச்சகத்தின் பணிப்பாளர் நாயகம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
செலவிட்ட தொகை சுமார் 20 கோடி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 17 மாவட்டங்கள் தொடர்பான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு பாதுகாப்புக் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ள போதிலும், அவை இதுவரை பொலிஸாரின் பாதுகாப்பில் பொதியிடப்பட்டு சரிபார்க்கப்படவில்லை.
வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு அரசாங்க அச்சகம் தற்போது செலவிட்ட தொகை சுமார் 20 கோடி ரூபாவாகும்.
ஆனால் அந்த அச்சடிக்கும் பணிக்காக இதுவரை நான்கு கோடி ரூபாவே கிடைத்துள்ளது.
எழுத்து மூலமாக அறிவிப்பு
ஏதேனும் காரணம் கொண்டு தேர்தல் ரத்து செய்யப்பட்டால் உள்ளூராட்சி தேர்தலுக்காக அச்சடிக்கப்பட்ட அனைத்து வாக்குச்சீட்டுகளையும் தூக்கி எறிய நேரிடும்.
ஆனால் அறிவுறுத்தல் துண்டு பிரசுரங்கள் மற்றும் படிவங்களை மட்டுமே மற்ற தேர்தல்களுக்கு பயன்படுத்த முடியும்.
அவ்வாறான நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான ஏனைய வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணியை பணம் வழங்கும் வரை ஆரம்பிக்க முடியாது என்றும் அரசாங்க அச்சக பணிப்பாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.