பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு ஏற்பட்டுள்ள தீவிரமான சவால்
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுக்கும், பிரித்தானிய முன்னாள் அமைச்சர் மண்டெல்சனுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது தற்போதைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு ஒரு "தீவிரமான சவால்" என்று முன்னாள் பிரதமர் கார்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான 'எப்ஸ்டீன் கோப்புகள்' (Epstein files), மண்டெல்சன் பிரித்தானிய அரசாங்கத்தின் மிக ரகசியமான பொருளாதாரத் தகவல்களை எப்ஸ்டீனுக்குக் கசிந்ததாகத் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, 2010ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவித் திட்டம் குறித்த தகவல்களை முன்கூட்டியே எப்ஸ்டீனுக்கு அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பிபிசி வானொலிக்கு அளித்த நேர்காணலில் கார்டன் பிரவுன் கூறியதாவது, "மண்டெல்சனின் செயல் நாட்டுக்கு இழைக்கப்பட்ட துரோகம். நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்புடன் அவர் விளையாடியுள்ளார். இதை எண்ணி நான் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைகிறேன்."
பிரித்தானிய பொருளாதாரம்
2024ல் அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதராக மண்டெல்சனைப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நியமித்தமை ஒரு 'தவறு'. 2008-ல் எனது அமைச்சரவையில் அவரைச் சேர்த்ததும் நான் செய்த தவறுதான்.

கெய்ர் ஸ்டார்மர் ஒரு நேர்மையான மனிதர். ஆனால், அவர் மண்டெல்சனால் ஏமாற்றப்பட்டுள்ளார். இந்த ஊழல் அமைப்பைச் சுத்தப்படுத்த வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு உள்ளது.
"அரசாங்க ரகசியங்களை கசியவிட்டதன் மூலம் பிரித்தானியாவின் நாணயம் மற்றும் வர்த்தகம் பெரும் ஆபத்திற்கு உள்ளானது. இது ஒரு நிதி ரீதியான குற்றமாகும்." என கார்டன் பிரவுன் குறிப்பிட்டார்.

மண்டெல்சனுக்குத் தொடர்புடைய இரண்டு இடங்களில் லண்டன் பொலிஸார் ஏற்கனவே சோதனைகளை முடித்துள்ளனர். அவர் மீது 'பொது அலுவலகத்தில் தவறான நடத்தை' போன்ற கடுமையான பிரிவுகளில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிரித்தானிய அரசியல் அமைப்பில் உடனடியாக மாற்றங்கள் தேவை என்று வலியுறுத்திய கார்டன் பிரவுன், அமைச்சர்கள் மற்றும் தூதர்களை நியமிக்கும் முன் அமெரிக்காவைப் போல பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.
இந்தப் முறைப்பாடுகள் காரணமாக மண்டெல்சன் தனது தூதர் பதவியிலிருந்து ஏற்கனவே விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.