ஹர்சண சூரியப்பெருமவை பதவி நீக்குமாறு அரசாங்கத்துக்கு கடும் அழுத்தம்
திறைசேரியின் செயலாளர் ஹர்சண சூரியப்பெருமவை பதவியில் இருந்து நீக்குமாறு பல்வேறு தரப்புகளிடம் இருந்து அரசாங்கத்துக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியப்பெருமவை அவரது பதவியிலிருந்து நீக்குமாறு எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி அண்மைக்காலமாக பல்வேறு சிவில் அமைப்புகளும் அரசாங்கத்தின் மீது கடும் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
பதவி விலகல் எதிர்க்கட்சி கொடுக்கும் அழுத்தம்
ஆஸ்திரேலியாவிற்குச் செலுத்தப்பட வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (2.5 மில்லியன்) கடன், மோசடிக் கும்பலொன்றின் கைகளுக்குச் சென்ற சம்பவம் குறித்து சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமானால், திறைசேரி செயலாளர் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி சுட்டிக்காட்டுகிறது.
நிதி அமைச்சர் பதவியை வகிக்கும் ஜனாதிபதியும் இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர் என்றும், அவரும் நிதியமைச்சுப் பதவி விலகல் செய்ய வேண்டும் என்றும் அரசியல்வாதிகளும் சிவில் சமூக அமைப்புகளும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்திற்குத் அறிவிக்காததன் மூலம் அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற ஒழுங்கு விதிகளை மீறியுள்ளதால், நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் திறைசேரி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மோசடி, பத்து தவணைகளில் நிகழ்ந்துள்ளதாகவும், இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க திறைசேரி செயலாளருக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குவது மிகையானது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், திறைசேரிச் செயலாளரைப் பதவியிலிருந்து நீக்குவது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், இந்த விடயம் குறித்து அரசாங்கத்திற்குள் எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.