கட்சியிலிருந்து ராஜிதவை உடன் வெளியேற்றுமாறு சஜித்துக்கு அழுத்தம்
கட்சிக்கு ஆபத்தாக இருக்கும் ராஜித சேனாரத்னவை உடனே நீக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குத் கட்சியின் முக்கியஸ்தர்கள் அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அரசுடன் இணைய வேண்டும் என்று ராஜித சேனாரத்ன தொடர்ச்சியாகக் கூறியுள்ளார்.
இதனிடையில் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி இதே கருத்தைப் பகிரங்கமாகக் கூறியதை தொடர்ந்து கட்சிக்குள் ராஜிதவுக்கு எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.
கட்சியின் முக்கியஸ்தர்கள் விசனம்
"ராஜித விரும்பினால் அரசுடன் இணையட்டும். ஆனால், கட்சிக்குள் இருந்துகொண்டு கட்சி அலுவலகத்தைப் பயன்படுத்தி இவ்வாறான கருத்துக்களை அவர் வெளியிடக்கூடாது" என ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதனால் ராஜிதவைக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வலியுறுள்ளனர்.
அதையடுத்து சஜித் பிரேமதாச, ராஜிதவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையை மேற்கொள்ளுமாறு கட்சி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாசீம், திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் லக்ஸ்மன் கிரியெல்ல உள்ளிட்ட ஒழுக்காற்றுக் குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கட்சிக்கு ஆபத்து
இதனையடுத்து ரஞ்சித் மத்தும பண்டாரவின் வீட்டில் விசாரணை ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் விசாரணைக்கான அழைப்பை விடுத்ததும் அழைப்பை ஏற்று உடனே முன்னிலையாகி தனது விளக்கத்தை ராஜித வழங்கியுள்ளார்.
அந்த விளக்கம் எவ்வாறு இருப்பினும், அரசுடன் இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கும் அவரைத் தொடர்ந்தும் கட்சிக்குள் வைத்திருந்தால் கட்சிக்கு ஆபத்து என்றும், அவரை உடனே நீக்க வேண்டும் என்றும் கட்சிக்குள் இருந்து தொடர்ந்தும் தலைவர் சஜித்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.