அநுரவின் ஆபத்தான கடல் பயணம்! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கச்சத்தீவு விஜயம்
ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்கவின் கச்சத்தீவு விஜயம் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கச்சத்தீவிற்கு படகில் பயணம் செய்தபோது உயிர் காப்பு அங்கி அணியாது பயணம் செய்திருந்தார்.
ஜனாதிபதி மட்டுமன்றி அமைச்சர்களும் உயிர்காப்பு அங்கிகளை அணியாது படகில் பயணம் செய்திருந்தனர்.
ஆபத்தான அநுரவின் பயணம்
ஒரு நாட்டின் தலைவர் மக்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் எனவும் உயிர் காப்பு அங்கி அணியாது பயணம் செய்வது ஆபத்தானது எனவும் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்பட்டிருந்த ஊடகவியலாளர் உவிந்து குருகுலசூரிய இது தொடர்பில் தனது முகநூலில் கடும் விமர்சனத்தை வெளியிட்டிருந்தார்.
ஜனாதிபதி படகில் பயணித்தபோது உயிர் காப்பு அங்கி அணியாது பயணம் செய்தது சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் அணியாதது, வாகனத்தில் பயணம் செய்யும்போது இருக்கை பட்டி அணியாதது போன்றே படகில் பயணிக்கும் போது உயிர் காப்பு அங்கி அணியாது பயணம் செய்வதும் சட்டவிரோதமானது எனவும் அது கட்டாயமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா பிரதமர் இவ்வாறு உயிர் காப்பு அங்கி அணியாது பயணித்தமைக்காக 250 டொலர் அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
2017 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பிரதமர் மெல்கம் டர்ன்புல் சிட்னி துறைமுகப் பகுதி கடலில் உயிர்காப்பு அங்கி அணியாமல் பயணித்ததனால் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமாரதுசாநாயக்க, அமைச்சர்களான ராமலிங்கம் சந்திரசேகரன், ஆனந்த விஜயபால மற்றும் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரால் புத்திக லியனகே ஆகியோர் ஜனாதிபதியுடன் இந்த பயணத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி இவ்வாறு உயிர் காப்பு அங்கி அணியாமல் பயணம் செய்தது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சர்வதேச ஊடக மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் அனுரத்த லொகுவாரச்சி தனது முகநூலில் விளக்கம் அளித்துள்ளார்.
ஜனாதிபதி உயிர் காப்பு அங்கி அணியாமல் பயணம் செய்தது நியாயமானது என அவர் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு விஜயம் வரலாற்று ரீதியாகவும் குறியீட்டு ரீதியாகவும் முக்கியத்துவமானது எனவும் நாட்டின் இறைமையை பறைசாற்றும் வகையில் இந்த விஜயம் அமைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டிய அதி உச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
உயிர் காப்பு அங்கி அணிய வேண்டியது அவசியமானது என்ற போதிலும் ஜனாதிபதிக்கு போதிய அளவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு விஜயம் நாட்டின் கௌரவம் தொடர்பான ஒரு செய்தியை வெளிப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டது எனவும் இதனால் தலைவர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் சில குறியீட்டு ரீதியான தெரிவுகளையும் மேற்கொள்வதாகவும் கடற் படையினர் மீது ஜனாதிபதிக்கு இருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் அவர் உயிர் காப்பு அங்கி அணியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறையாண்மையை பறைசாற்றுவதை முதன்மை நோக்காக கொண்டு இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளில் உலகில் அனேக தலைவர்கள் ஈடுபட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா பதவியில் இருந்த காலத்தில் உயிர் காப்பு அங்கி இல்லாமல் விடுமுறை காலத்தில் படகு செலுத்தி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இவ்வாறு சில சந்தர்ப்பங்களில் உயிர் காப்பு அங்கி அணியாது படகுகளில் பயணம் செய்துள்ளனர் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் சர்வதேச ஊடக மற்றும் மூலோபாய தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் அனுருத்த லொகுஹபுவாரச்சி முகநூலில் பதிவிட்டுள்ளார்.



