சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு
இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதையும் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்ட புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் முன்னணி ஆடைத் துறை வர்த்தகர்கள் மற்றும் பெருமுதலீட்டாளர்களுடன் நேற்றையதினம்(22) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அவசர நடவடிக்கை
உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நீண்ட காலமாக மனித உரிமை அமைப்புகளாலும், சர்வதேச சமூகத்தினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இந்தப் புதிய சட்டக் கட்டமைப்பு முழுமையாக இரத்துச் செய்யும் என்று ஜனாதிபதி இதன்போது உறுதிப்படுத்தினார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்துக்குப் பதிலாக இன்றைய நவீன சமூகத்தின் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதே புதிய சட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என்று சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், அரசியல் பழிவாங்கல்களுக்கோ அல்லது தன்னிச்சையான கைதுகளுக்கோ இடமளிக்காத வகையில், நாட்டின் சாதாரண குடிமக்களின் மனித உரிமைகளையும், ஜனநாயகச் சுதந்திரங்களையும் முழுமையாக உறுதி செய்யும் வகையிலேயே இந்தப் புதிய சட்டமூலம் வடிவமைக்கப்பட்டு வருகின்றது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.