முதுகெலும்பில்லாத ஜனாதிபதி ஒருவரால் எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும்? விஜித் விஜயமுனி சொய்சா கேள்வி
அமைச்சர்களை கூட பதவி நீக்க முடியாத ஜனாதிபதியால், எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும் என மக்கள் கேள்வி எழுப்புவதாக ஐக்கிய மக்கள் சக்தியின்(SJB) ஜா-எல தொகுதியின் அமைப்பாளர் விஜித் விஜயமுனி சொய்சா(Vijitha wijemuni zoysa)தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசாங்கத்திற்கு 69 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். இது போதவில்லை என தனது சகோதரனை பிரதமராக்க வேண்டும் என்றனர் மக்கள் அதனை செய்துக்கொடுத்தனர்.
இதனையடுத்து நாடாளுன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கேட்டனர். மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் வழங்கினர்.
மூன்று இரண்டு பெரும்பான்மை பலத்துடன் கூடிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரம் மற்றும் நாடாளுமன்றத்தில் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி 20வது திருத்தச் சட்டத்தையும் நிறைவேற்றிக்கொண்டனர்.
நாடாளுமன்றத்தில் இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கி, ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரித்தவர்கள் தற்போது முதலை கண்ணீர் வடிக்கின்றனர்.
இவர்கள் மக்களை ஏமாற்ற தற்போது பல்வேறு நாடகங்களை அரங்கேற்ற முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜனாதிபதி அதிசயமான கதை ஒன்றை கூறியுள்ளார். அமைச்சரவை, அமைச்சுக்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளுக்கு தான் நியமித்தவர்கள் தனது கொள்கையை நடைமுறைப்படுத்துவதில்லை என ஜனாதிபதி கூறுகிறார்.
இதனால், ஜனாதிபதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றே மக்களும் கூற வேண்டியுள்ளது. சேரும் பெயில், சேரின் சகாக்களும் பெயில். அத்துடன் விமல் வீரவங்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோரை ஜனாதிபதியால் பதவியில் இருந்து நீக்க முடியவில்லை.
அவர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறுகிறார். அவர்கள் பதவி விலக மாட்டோம் என்கின்றனர். அமைச்சர்களையும், கூட்டுத்தாபனம் மற்றும் சபைகளின் தலைவர்களையும் நியமிக்கவும் நீக்கவும் முடியாத முதுகெலும்பில்லாத ஜனாதிபதி ஒருவரால் எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும்.
இதுவே மக்கள் மத்தியில் இருக்கும் கேள்வி. ஜனாதிபதிக்கு கூறுவதை கேட்டு செய்ய முடியாது, அவரால் தனித்து சிந்தித்தும் எதனையும் செய்ய முடியாது எனவும் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.