வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்தால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போட்டிகள் அல்லது முரண்பாடுகள் காரணமாக இலங்கை, இந்திய சந்தைக்கு நுழைய அல்லது ஆபிரிக்க சந்தையை திறப்பதற்கு தடையாக இருக்க கூடாதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு இடையில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான போட்டியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நேர்காணல் ஒன்றிலேயே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்து-பசுபிக் பிராந்தியம் தொடர்பான ஆசியான் பார்வைக்கு இலங்கை உடன்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்து-பசுபிக் பிராந்தியமானது இரண்டு வெவ்வேறு சமுத்திரங்களைக் கொண்டுள்ளதாகவும், இந்தியப் பெருங்கடலில் சுதந்திரமான கடற்பயணத்திற்கும், கடலுக்கடியில் கேபிள்களின் பாதுகாப்பிற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே, தைவான் உட்பட ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பிரச்சினைகள் இந்து சமுத்திரத்தில் பரவாமல் இருப்பதை உறுதி செய்வது இலங்கையின் எதிர்காலத்திற்கு அத்தியாவசியமானது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.