ஜனாதிபதி மாளிகை காவலரணில் மதுபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட பொலிஸ் பரிசோதகர்
நுவரெலியாவில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள காவலரணில் கடமையில் இருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சீருடையில் மதுபானம் அருந்தி விட்டு மோசமாக நடந்துக்கொண்ட காரணத்தினால் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா தலைமை பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர்

நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட இந்த பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்ட நுவரெலியா உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் பரிசோதகரை பணி இடைநீக்கம் செய்துள்ளார்.
இந்த பொலிஸ் பரிசோதகர் மதுபோதையில் காவலரணில் குழப்பம் விளைப்பது போல் நடந்துக்கொள்வதாக நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற பொலிஸ் குழு அவரை கைது செய்துள்ளது.
பொலிஸ் பரிசோதகர் தொடர்பாக மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்ஜீவ தர்மரத்னவின் மேற்பார்வையின் கீழ் நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்தி உடுகமசூரியவின் ஆலோசனைக்கு அமைய நுவரெலியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் செனவிரத்ன விசாரணைகளை நடத்தி வருகிறார்.