ரணிலால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்
மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலுக்கு சாதகமாக களமிறங்கினாலே அன்றி ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (26.12.2023) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய சூழ்நிலையில் 2024ஆம் ஆண்டு எந்த தேர்தல் எப்போது நடக்கும் என்பது தொடர்பில் யாருக்கும் தெரியாது.
தேர்தல் எப்போது நடக்கும்
முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடாத்துவதற்கு வாய்ப்பு இல்லை.
ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று அதில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தற்போதைய ஜனாதிபதியை தொடர்ந்து இருக்க அனுமதிக்க மாட்டார்கள் என்ற நிலைப்பாட்டினால் ஜனாதிபதி தேர்தல் தான் முதலில் நடக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது.
அப்படி நடந்தால் கூட நான்கு பிரதான கட்சிகளிலும் முக்கியமானவர்கள்
வேட்பாளர்களாக களமிறங்க கூடும்.
50% வாக்குகள்
அவ்வாறு களமிறங்கினால் தனி ஒருவரினால் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்கினை பெற்றுக்கொள்ள முடியாது போய்விடும்.
அவ்வாறு இருக்கும்போது ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வருவாரா என்ற கேள்வி எழுகின்றது?
ரணில் ஜனாதிபதியாக வரவேண்டுமாக இருந்தால் மொட்டு கட்சியின் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சாதகமாக அமைந்தால் மாத்திரமே ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.




