கிளாஸ்கோ நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி
ஐக்கிய நாடுகள் சபையின் 26வது காலநிலை மாற்ற மாநாட்டில் (COP26) கலந்து கொள்வதற்காக சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரை சென்றடைந்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இன்று மதியம் 12.40 (உள்ளூர் நேரப்படி) மணியளவில் கிளாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தனர்.
ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன இலங்கைக் குழுவிற்கு வரவேற்பு அளித்தார்.
பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்கவும், பருவநிலை நெருக்கடியைச் சமாளிக்க நாடுகள் தங்கள் உத்திகளை எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதைப் பற்றி பேசவும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு கிளாஸ்கோவில் நாளை முதல் நவம்பர் 12 வரை நடைபெறுகிறது.
நவம்பர் 01 மற்றும் 02 திகதி உலகத் தலைவர்களின் உச்சி மாநாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் 197 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள், அறிஞர்கள் மற்றும் வணிகர்கள் உட்பட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25,000 பேர் கலந்துகொள்வார்கள்.
ஐக்கிய இராச்சியத்தில் இதுவரை நடைபெற்ற மாநாடுகளில் இதுவே மிகப் பெரிய மாநாடு எனத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்டவர்கள் ஜனாதிபதியுடன் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.