மீண்டும் இனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.. யாழில் அநுர சபதம்
இலங்கையில் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர் முற்படுபவர்களுக்கு இடமளிக்கமாட்டோம், இனவாதம் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, மீசாலையில் இன்று(16.01.2026) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றி தவிக்கும் 2 500 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இனவாதம் இனி இருக்காது..
அவர் மேலும் உரையாற்றுகையில்,
போரின் போது வடக்கில் பல வீடுகள் சேதமடைந்தன. இவ்வாறு சேதமடைந்த வீடுகள் இன்னும் முழுமையாக மீளமைக்கப்படவில்லை.

போர்க் காலத்திலும் இடம்பெயர்ந்து பலர் வாழ்ந்தனர். தற்போதும் இடம்பெயர்ந்து வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தமக்கென வீடொன்று இன்மையே இதற்கு பிரதான காரணமாகும்.
எனவே, போரால் இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் வீடுயின்மை பிரச்சினைக்கு எமது ஆட்சியின் கீழ் தீர்வு காணப்படும்.
எம் மீது நம்பிக்கை வைத்தே வடக்கு மக்கள் வாக்களித்தார்கள். அந்த நம்பிக்கையை சிதைக்கும் வகையில் நாம் செயல்படமாட்டோம். ஏனெனில் இது மக்களுக்கான அரசாங்கமாகும்.

இதேவேளை, இனவாதம் என்பது இந்த நாட்டுக்கு அழிவையே தந்துள்ளது. இதன்மூலம் எந்தவித நன்மையும் கிட்டவில்லை.
மக்கள் மத்தியில் துயரங்கள் குவிந்துள்ளன. தற்போதும் அரசியலுக்காக இனவாதப் பிரச்சினையை தோற்றுவிப்பதற்கு சிலர் முற்படுகின்றனர். நாம் இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என உறுதியளித்துள்ளார்.