பல நாட்டு பிரமுகர்களை சந்தித்த ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தனது பதவிக்காலம் நிறைவடைந்து இலங்கையை விட்டு வெளியேறும் போல் ஸ்டீபன்ஸின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி இதன்போது வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போதும் அதற்குப் பின்னரும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் வழங்கிய ஆதரவை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.
மேலும், கடந்த காலங்களில் அவுஸ்திரேலிய இராஜதந்திரிகள் பலர் இந்நாட்டுக்கு விஜயம் செய்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் உயர்ஸ்தானிகர் வழங்கிய ஆதரவைப் பாராட்டினார்.
தொடர் ஆதரவு
இந்நாட்டு சுற்றுலா, கல்வி மற்றும் தொழிற்கல்வி போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் பின் ஆதமுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அண்மைய கால வெற்றிகள்
விசேடமாக மலேசியாவின் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கல்வி ஆகிய துறைகள் மற்றும் அண்மைய கால வெற்றிகள் குறித்த தனது அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக மலேசிய உயர்ஸ்தானிகர் இங்கு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் எரிக் வொல்ஷிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தனது பதவிக் காலம் நிறைவடைந்து இலங்கையை விட்டு வெளியேறும் எரிக் வொல்ஷின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி இதன்போது வாழ்த்துத் தெரிவித்தார்.
கனடாவில் இலங்கை மக்கள் அதிகளவில் வசிப்பதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதற்கும், இந்நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், நல்லிணக்கச் செயல்முறைக்கும் கனடா வழங்கிய ஆதரவைப் பாராட்டியதுடன், எதிர்காலத்திலும் அத்தகைய ஆதரவு வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.







நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்



