நாடாளுமன்றில் விடுதலைப்புலிகள் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழ் எம்பிக்கள்..
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் ஆட்சியில் தமிழர் தாயகப்பரப்பில் கடற்றொழில், விவசாயம் என்பன தன்னிறைவுபெற்றிருந்ததாகவும், போதைப்பொருட்கள் அறவே அற்ற, பாதுகாப்பான சூழல் இருந்ததாகவும் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், எனவேதான் அவரை தமிழ் மக்கள் இறைவனாகப் போற்றுகின்றனர் எனவும் தெரிவித்தார்.
அத்தோடு தமிழ் இனத்தின் இறைவனான வே.பிரபாகரன் அவர்களுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் நாடாளுமன்றில் தெரிவித்தார்.
தமிழர் தாயகம்
கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"ஆழக் கடல் எங்கும், சோழ மகராஜன் ஆட்சிபுரிந்தானே அன்று தமிழீழக் கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கின்றான் இன்று காலை விடிந்ததென்று பாடு சங்க காலம் திரும்பியது ஆடு" தமிழ் இனத்தின் தேசியத் தலைவனது ஆட்சியை வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகப்பரப்பில் வாழ்ந்த தமிழ் மக்கள் இவ்வாறாகத்தான் கொண்டாடினார்கள்.
அவரின் ஆட்சியில் கடலிலே இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களும் அடாவடிகளும் இருக்கவில்லை. சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இருக்கவில்லை.
தமிழ் மக்கள்
கடற்றொழிலாளர்கள் மகிழ்ச்சியாகக் கடற்றொழிலில் ஈடுபட்டனர். காணி அபகரிப்புக்களும் இல்லை. எனவே தமிழர் தாயகம் விவசாயத்திலும் செழித்திருந்ததது.

போதைப் பொருட்கள் அறவே இல்லை. நள்ளிரவிலும் பெண்கள் சுதந்திரமாக உலவக்கூடிய நிலையிருந்தது. தாயகப்பரப்பில் மக்கள் தன்னிறைவு பெற்று பாதுகாப்பாக வாழ்ந்தனர். எனவேதான் தமிழ் மக்கள் மேதகு அவர்களை இறைவனாகவும், அவரது ஆட்சிக் காலத்தினைச் சங்ககாலமாகவும் போற்றுகின்றனர்.
அந்த தமிழ் இனத்தின் இறைவனுக்கு இன்று பிறந்தநாள். இந்த உயரிய சபையிலே மேதகு அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இதேவேளை, உலக தமிழருடைய தலைவரே பிரபாகரன். அவரையோ அல்லது அவருக்கு கீழ் இயங்கிய போராளிகளையோ தூக்கி பிடிக்காமல் ஜேவிபி வடக்கு கிழக்கில் அரசியல் செய்ய முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைக்கு ஈழத் தமிழர்களுடைய மட்டுமல்ல உலகத் தமிழருடைய தலைவராக இருக்கக்கூடிய தலைவர் பிரபாகரன் அவர்களுடைய 71வது ஆண்டு பிறந்த தினம். இந்த தேசிய தலைவர் அவர்களுடைய போராட்டத்தை 2009 ஆம் ஆண்டுக்கு முதலும் அதுக்கு பிறகும் மிக மோசமாக விமர்சித்து கேவலப்படுத்திய தரப்புகளிலே இன்றைக்கு ஆட்சியிலே அமர்ந்திருக்கக்கூடிய ஜேவிபி பிரதான கட்சியாகும்.

மகிந்த ராஜபக்ச தரப்பு இனவாதம் பேசிய பொழுது இந்த தமிழினத்துக்கு எதிராக தேசிய தலைவருடைய தலைமையத்துவத்திலே நடந்து கொண்டிருந்த விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு ஒரு இன அழிப்புக்கு தத்துவார்த்த ரீதியாக இருந்தவர்கள் தான் ஜேவிபி.. அப்படி இருக்கவும் இன்றைக்கு வடகிழக்கிலே அந்த தேசிய தலைவருடைய தலைமைத்துவத்துக்கு கீழே இயங்கிய போராளிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் அங்கு இருக்கக்கூடிய மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக வட கிழக்கு தமிழா மக்களுக்கு காட்டுதுடன் தெற்கிலே அதற்கு நேர்மாறாக கருத்துக்களை தெரிவிக்கின்ற ஒரு சூழல் இன்றைக்கு காணப்படுவதாக இருக்கின்றது. இதிலே பிரதானமாக செயல்படுவதிலே கடற்தொழில் அமைச்சரும் ஒரு முக்கியமானவர்.
ஏனென்றால் தியாகதீபம் திலீபன் அவர்களுடைய நினைவு நிகழ்வுக்கு அவர் நேரடியாக சென்றார்.
இதிலே என்ன காரணமென்றால் நான் என்னத்தை சொல்ல வருகிறேன் என்றால் ஜேவிபி போன்ற தமிழ் தேச விரோத கொள்கைகளை கொண்ட நபர்கள் இன்றைக்கு அந்த தேசிய தலைவருடைய போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிறகு அதே தேசிய தலைவரையும் அவருடைய மாவீரர்களையும் அந்த இயக்கத்தையும் கதைத்து பேசி அதை தூக்கி பிடிக்காமல் வடகிழக்கில் நுழைய முடியாது.
அதனால் எந்தளவு தூரத்திற்கு தமிழ் தேச விரோத தத்துவங்களை கொண்ட தரப்புகள் தோல்வி அடைந்திருக்கின்றன என்பதைத்தான் நான் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது எனத் தெரிவித்தார்.
மேலதிக தகவல்-திலீபன்