யாழில் மின்சார நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்
யாழ். வட்டுக்கோட்டை மின்சார நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது அடையாளம் தெரியாத சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை மின்சார நிலையத்திற்கு இன்றையதினம்(06.07.2023) மதுபோதையில் வருகை தந்த இருவர் அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
பொன்னாலை பகுதியில் இருந்து மது போதையில் வந்த இருவர், தமது வீட்டிற்கு சிவப்பு மின்சார பட்டியல் வந்தது என்றும் அதன்பின்னர் மின் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கூறியுள்ளனர்.
சரமாரியாக தாக்குதல்
அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு உத்தியோகத்தர், குறித்த சிவப்பு மின்சார பட்டியலை உள்ளே காண்பிக்குமாறு தெரிவித்துள்ளார்.
இதற்கமைய உள்ளே சென்ற இருவரும் அங்கு கடமையில் இருந்த உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்போது அவ்விடத்திற்கு சென்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் அவர்களை வெளிறேற்ற முயன்றபோது அவர்மீது சரமாரியாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, தாக்குதலுக்கு உள்ளான பாதுகாப்பு உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |