ஜனாதிபதி, உட்பட்ட அரசியல்வாதிகளுக்கும் மின்சார தடை பொதுவானதாக இருக்க வேண்டும்
இலங்கையின் மின்சார விநியோகம் தடைசெய்யப்படுமானால், அது ஜனாதிபதி உட்பட்ட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு கோரியுள்ளது.
அமைப்பின் தலைவர் அசேல சம்பத் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று(10) இடம்பெற்ற மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் அறக்கட்டளையின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று மின்சார விநியோகத்தில் மேற்கொள்ளப்படும் தடைகளுக்கு அதிகாரிகள் மாபியாவே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இது தொடர்பில் ஜனாதிபதி நியமித்த குழுவும் இதனையே சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
அத்துடன் மின்சார விநியோகத்தில் தடையைக் கொண்டு வரவேண்டுமானால், அது ஜனாதிபதி எதிர்க்கட்சி தலைவர் உட்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.
சாதாரண பொதுமக்கள் மின்சார தடையினால் இருளில் இருக்கும் போது, அரசியல்வாதிகள் வெளிச்சத்தில் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அசேல சம்பத் குறிப்பிட்டார்.
இதேவேளை இன்று இலங்கையில் எல்லாவற்றுக்கு வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளமையால், எதிர்கட்சி தலைவர் மற்றும் ஜேவிபியின் தலைவர் ஆகியோரும் பொருட்களை கொள்வனவு செய்யும் வரிசைக்கு வந்து, சர்வதேசத்துக்கு இலங்கை அரசாங்கத்தின் நிலையை எடுத்துக்காட்டவேண்டும் என்றும் சம்பத் ஆலோசனை வழங்கியுள்ளார்.